
3வது டி20 ஆட்டம்
3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி 212 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தவான், தோனி தவிர்த்து மற்ற வீரர்கள் ரன் சேர்க்க உதவினர்.

கடைசி ஓவர்
கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை யில் தினேஷ் கார்த்திக் அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார்.

ரன் ஓட மறுத்த தினேஷ்
முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் தினேஷ். அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. மூன்றாவது பந்தை லாங் ஆனில் தட்டி விட்டார் தினேஷ். இந்த முறை எளிதாக ஒரு ரன் ஓடி இருக்க முடியும். க்ருனால் பண்டியா பாதி தூரம் ஓடி வந்தார். ஆனால், தினேஷ் ரன் வேண்டாம் என மறுத்து விட்டார்.

அந்த ஒரு ரன்
கடைசி மூன்று பந்துகளில் இந்தியா 9 ரன்கள் அடித்தது. தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார், ஆனால், அதற்கு முன்பே இந்தியா வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு தினேஷ் கார்த்திக் அந்த ஒரு ரன் ஓட மறுத்தது தான் காரணம் என்ற பேச்சு கிளம்பத் துவங்கி உள்ளது.
சிறிய தவறு - பெரிய விளைவு
இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், "தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினார். ஆனால், சிறு தவறுகள், டி20 களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எதிர் பக்கம் க்ருனால் பண்டியா இருக்கும் போது அந்த ஒரு ரன் ஓடாதது தவறு" என கூறியுள்ளார்.

க்ருனால் பண்டியா பேட்டிங்
க்ருனால் பண்டியா நல்ல அதிரடி பேட்ஸ்மேன். நேற்றைய போட்டியிலும் அவர் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடங்கும். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவருக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு மறுத்து, ஒரு ரன் ஓடாமல் இருந்தது தவறு என பலரும் கூறி வருகின்றனர்.

தினேஷ் பரிதாபம்
தினேஷ் கார்த்திக் தனிப்பட்ட முறையில் இந்த போட்டியில் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார் அவர். நான்கு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஆனால், ஒரு சிறிய தவறு செய்து தோல்விக்கே அவர் தான் காரணம் என்ற பேச்சுக்கு ஆளாகி விட்டார்.


Click it and Unblock the Notifications
