3வது டி20யில் தினேஷ்
3வது டி20 போட்டியில் 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 145 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. 28 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நிலை. அப்போது க்ருனால் பண்டியா - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர்.
அந்த 1 ரன்
இருவரும் அதிரடியாக ஆடி கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்றாவது பந்தில் 1 ரன் ஓட வாய்ப்பு கிடைத்தும், அவர் அந்த ரன்னை எடுக்கவில்லை.
சிக்ஸ் அடிக்க முடியும்
க்ருனால் பண்டியாவுக்கு பேட்டிங் கொடுத்தால் என்ன? அவரும் அதிரடி வீரர் தானே? தினேஷ் கார்த்திக் தவறு செய்து விட்டார் என அப்போது கூறப்பட்டது. இது குறித்து தற்போது பேசிய தினேஷ் கார்த்திக், தான் அந்த நேரத்தில் சிக்ஸ் அடிக்க முடியும் என நம்பியதாக கூறியுள்ளார்.
நம்பி இருக்க வேண்டும்
அழுத்தமான நேரத்தில் தன்னால் பெரிய ஷாட்கள் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உண்டு, அதே சமயம் எதிரில் இருக்கும் சக வீரரையும் நம்ப வேண்டும். அந்த நேரத்தில் நான் அதை செய்யவில்லை. கிரிக்கெட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடியதே என கூறினார்.
டிம் சௌதி பந்துவீச்சு
சில நாள் நாம் சிறப்பாக பவுண்டரி அடிப்போம். சில நாள் பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுவார். அன்று டிம் சௌதி அழுத்தமான நேரத்தில் யார்க்கர் வீசினார். அவர் ஒரு தவறு செய்து இருந்தாலும் நாங்கள் அவரை வீழ்த்தி இருப்போம் என்றார் தினேஷ் கார்த்திக்.
இருவரில் யார்?
தினேஷ் கார்த்திக் அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளார். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் யாரை உலகக்கோப்பை அணியில் ஆடவைக்கலாம் என்ற குழப்பம் அணி நிர்வாகத்துக்கு உள்ளது.
தீர்வு காணும் களம்
அதற்கான தீர்வு காணும் களமாக ஆஸ்திரேலிய தொடர் அமைய உள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் அனுபவ வீரர் என்பதால் அவருக்கே வாய்ப்பு அதிகம். அதே சமயம், இரு வீரர்களுமே உத்தேச அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
தினேஷ் போராட்டம்
தினேஷ் கார்த்திக் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இதுவரை 91 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இந்திய அணியில் நீண்ட காலம் வாய்ப்பு பெற முடியாமல் இருந்தார் தினேஷ் கார்த்திக்.
சிறப்பு பயிற்சி
பின்னர், பினிஷிங்குக்கு தேவையான அதிரடி ஆட்டத்துக்கு, மும்பை வீரர் அபிஷேக் நாயருடன் சிறப்பு பயிற்சி எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும், தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாக முக்கிய காரணமாக இருக்கும்.