தரம்சாலா : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டார்.
ரச்சின் ரவீந்திரா இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் ராகுல் டிராவிட் (ரா) மற்றும் சச்சின் (ச்சின்) பெயர்களை இணைத்து வைக்கப்பட்டது.

அவர் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர். அதனாலேயே ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடினார். இக்கட்டான நேரத்தில் நியூசிலாந்து அணிக்கு கை கொடுத்து அந்த அணி பெரிய இலக்கை நோக்கி நகர காரணமாக இருந்தார்.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கான்வே டக் அவுட் ஆன உடன் நான்காவது ஓவரிலேயே களமிறங்கினார் ரச்சின். அவர் வந்த அடுத்த சில ஓவர்களில் மற்றொரு துவக்க வீரர் வில் யங் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், டேரில் மிட்செல் உடன் இணைந்து நீண்ட கூட்டணி அமைத்தார் ரச்சின்.
இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தனர். ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடி 75 ரன்கள் சேர்த்தார். பின் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 6 ஃபோர் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார்.
ரச்சின் ஆடும் ஆட்டம் மிக நேர்த்தியாக தவறான பந்துகளை தேர்வு செய்து அடிப்பது என அப்படியே சச்சின் டெண்டுல்கரின் பாணியை ஒத்து இருக்கிறது. இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் பலர் இவர் பூர்வீக இந்தியரான அவர் இந்திய அணிக்கே ஆடி இருக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் அவர் 11 ரன்கள் எடுத்து இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஜடேஜா தவறவிட்டார். அதை பயன்படுத்திக் கொண்ட ரவீந்திரா இந்திய அணிக்கு தண்டனையாக 75 ரன்கள் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய டேரில் மிட்செல் சதம் அடித்தார்.