
பண்டியா என்ன செய்வார்?
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் தொடரில் மூன்றாம் போட்டியில் இருந்து இடம் பிடித்துள்ள பண்டியா, தன் மீதான ரசிகர்களின் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பார்? இடை நீக்கம், விளம்பர வாய்ப்புகளை இழந்தது உள்ளிட்டவற்றால் மனதளவில் சோர்ந்து இருப்பாரா என்ற கேள்வியும் இருந்தது.

பண்டியா அசத்தல்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடிய ஹர்திக் பண்டியா, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். முதல் சில ஓவர்களில் மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசி நம்பிக்கை அளித்தார். அதே போல, பீல்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கேட்ச் பிடித்து மிரள வைத்தார்.

கேன் வில்லியம்சன் ஆட்டம்
17வது ஓவரில் சாஹல் வீசிய பந்தில் அட்டகாசமான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார் பண்டியா. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்து வந்த போது சாஹல் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க வேண்டி இறங்கி வந்து அடித்தார்.
கடினமான கேட்ச்
அப்போது பண்டியா வேகமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். இது போன்ற கேட்ச்களை எளிதாக பிடிக்க முடியாது என்ற நிலையில், பண்டியா கலக்கலாக டைவ் கேட்ச் பிடித்தார். இது இணையத்தில் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

பந்துவீச்சில் சூப்பர்
பீல்டிங்கில் கலக்கிய பண்டியா, பந்துவீச்சில் தன் 10 ஓவர்களையும் வீசி 45 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பண்டியா அடுத்து வரும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகளை அளித்தால், உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் பிடித்து விடுவார்.


Click it and Unblock the Notifications
