நியூசிலாந்து அணி திட்டம்
நியூசிலாந்து ஆடுகளங்களில் 300+ ரன்கள் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கேற்பவே இரு அணிகளும் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூசிலாந்து அணி தங்கள் முழு நேர சுழற் பந்துவீச்சாளரை நீக்கி விட்டு ஆல்-ரவுண்டர் ஒருவரை மட்டுமே சுழலுக்கு வைத்துள்ளது.
சுழற் பந்துவீச்சுக்கு யார்?
ஆனால், இந்திய அணி அதற்கு நேர் மாறாக சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜாவை நீக்கிவிட்டு, குல்தீப், சாஹல் என இரண்டு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கியுள்ளது. மேலும், பகுதி நேரத்திற்கு ஜாதவையும் அணியில் சேர்த்துள்ளனர்.
வேகப் பந்துவீச்சில் யார்?
வேகப் பந்துவீச்சுக்கு புவனேஸ்வர் குமார், ஷமி தவிர மித வேக ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகத்துக்கு ஒத்துழைக்கும் என்ற நிலையில், இந்தியா மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களை ஆட வைத்திருக்கலாம்.
ஆல்-ரவுண்டர் போதுமா?
விஜய் ஷங்கர் பண்டியாவிற்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் பகுதி நேர மித வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் நிச்சயம் இந்தியா மூன்று சிறப்பு வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் ஆட வைப்பதே நல்ல முடிவாக இருக்கும்.
தினேஷ் கார்த்திக் ஏன் இல்லை?
பினிஷர் எனக் கூறி தினேஷ் கார்த்திக்குக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரின் முதல் போட்டியில் அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் இருவருக்கும் வாய்ப்பு அளித்து தினேஷ் கார்த்திக்கை தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
மாற்றங்கள் சரியா?
உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இன்னும் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்து வருவது சரியான முடிவா? வீரர்கள் அணியில் தங்களுக்கு வாய்ப்பு உண்டா? இல்லையா? என குழப்பத்தில் இருப்பது அவர்களது தன்னம்பிக்கையை குறைக்காதா?
இந்திய அணி விவரம்
முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, தோனி, கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஷமி