
முதல் டெஸ்ட்
இந்திய அணியில் தொடர்ந்து நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருந்த காரணத்தால் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட், பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவிருக்கிறார். ஆனால் அவர் இளம் படையை வைத்து நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பெரும் பின்னடைவு
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் களமிறங்கவிருந்ததால் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பெரும் பின்னடைவாக கே.எல்.ராகுல் திடீரென டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிகிறது. எனவே தற்போது ஓப்பனிங்கிற்கு சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்குவார்கள். இந்திய அணியில் தொடக்கத்திலாவது ஒரு அனுபவ வீரராக ராகுல் இருக்கிறார் என நம்பிக்கை இருந்தது. அவர் விலகியிருப்பது இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே சரிவை தரக்கூடிய அபாயம் உள்ளது.

கவலை இல்லை
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரகானே பேசியுள்ளார். அதில் அவர், கே.எல்.ராகுல் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் டெஸ்ட் தொடரை விட்டு விலகியிருப்பது அதிர்ச்சியான ஒன்று தான். அவரை மிஸ் செய்வோம். ஆனால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் அவரின் இடத்தை நிரப்புவதற்கு நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். எனவே ஓப்பனிங் குறித்து எந்த கவலையும் பட தேவையில்லை.

சிறந்த வாய்ப்பு இது
உண்மையை கூற வேண்டும் என்றால் நாங்கள், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா என 3 முக்கிய வீரர்களை இல்லாமல் களமிறங்குகிறோம். ஆனால் இளம் வீரர்கள் தங்களது திறமையை காண்பிக்க இது ஒரு நல்ல தருணம். சுதந்திரமாக அவர்கள் விளையாடுவார்கள். இந்த அணி ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து அரவணைத்து செல்லும் வகையில் தான் உள்ளது என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ரகானே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











