
புது பயிற்சியாளர்
புதிய பயிற்சியாளர் டிராவிட் மற்றும் புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நியூசிலாந்துடன் முதல் டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. டி20 உலகக்கோப்பை தொடரின் போது டாப் ஆர்டர் மற்றும் பவுலிங் சொதப்பலாக இருந்தது. ஆனால் அந்த இரண்டையுமே சரி செய்து நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கெத்து காட்டினர். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது ராகுல் டிராவிட் தான் என ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.

பாண்டிங் வியப்பு
இந்நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக்கொண்டது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப்பாண்டிங் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தலைமை பயிற்சியாளர் பதவியை டிராவிட் ஏற்க மாட்டார் என்றுதான் நான் நினைத்தேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரது குடும்பம் குறித்து எனக்குத் தெரியவில்லை. இளம் குழந்தைகள் இருப்பது அறிவேன். இனி எப்படி அவர்களை பிரிந்து நீண்ட நாட்கள் அவர் இருக்கப்போகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

நேரம் இல்லை
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு என்னிடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியது. ஆனால் நான் மறுத்து விட்டேன். ஐபிஎல் தொடரின்போதே என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எப்படியாவது என்னை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் பயிற்சியாளர் பதவியில் அணியுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டி வரும். அந்த அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. எனவே என்னால் இதை ஏற்க முடியாது என்று கூறி விட்டேன் என பாண்டிங் கூறியுள்ளார்.

ஜாம்பவான்கள் மறுப்பு
ராகுல் டிராவிட்டிற்கு முன்னதாக பல முன்னாள் வீரர்களிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே, அனில் கும்ப்ளே, ரிக்கிப்பாண்டிங், விவிஎஸ். லக்ஷ்மண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியாக ராகுல் டிராவிட்டுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











