தரம்சாலா : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சில அறிவுரைகளை கூறினார்.
ஆனால், அதை மறுத்தார் ரோஹித் சர்மா. ஆனாலும், விடாமல் அவரை துரத்திச் சென்று ரோஹித் சர்மாவுடன் வாக்குவாதம் செய்தார் கோலி. இதனால் ரோஹித் சர்மா அதிருப்தி அடைந்தார்.
இந்த மொத்த சம்பவத்தையும் விளம்பர இடைவேளை இல்லாமல் நேரலையில் பார்த்தவர்கள் கண்டனர். ஏன் விராட் கோலி தன் எல்லையை மீறி கேப்டனுக்கு யோசனை சொல்கிறேன் என்ற பெயரில் வாக்குவாதம் செய்தார்?
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்கக் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஒரு கட்டத்தில் 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது நியூசிலாந்து அணி. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ரோஹித் சர்மா திணறி வந்தார். இடையே இந்திய அணி மூன்று கேட்ச்களை வேறு நழுவ விட்டது. இந்த நிலையில், விராட் கோலி, ஓவர் இடைவேளையின் போது ரோஹித் சர்மாவிடம் சில யோசனைகளை கூறினார்.
ஆனால், ரோஹித் சர்மா அதை ஒப்புக் கொள்ள மறுத்து தலையை அசைத்தார். ஆனாலும், விராட் கோலி கடுமையாக வாக்குவாதம் செய்து ரோஹித் சர்மா பின்னேயே சென்றார். அப்போதும் ரோஹித் சர்மா அவர் யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ரோஹித் சர்மா எரிச்சல் அடைந்தார்.
என்னதான் விராட் கோலி மூத்த வீரர், முன்னாள் கேப்டன் என்றாலும் யோசனை சொல்லும் போது இலகுவாக சொல்வது தான் நல்லது. மாறாக எல்லை மீறி கேப்டனை அவர் பணியை செய்ய விடாமல் செய்வது தவறு என பல ரசிகர்கள் இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர்.
பின்னர் ரச்சின் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது.