தரம்சாலா : தரம்சாலா மைதானத்தை சரி செய்யாமல் பிசிசிஐ செய்த தவறால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. அப்போது ரோஹித் சர்மா பீல்டிங் செய்த போது அவர் வழுக்கி விழுந்து அவர் விரல்களில் காயம் ஏற்பட்டது.
இந்த மைதானத்தில் பீல்டிங் செய்யும் பகுதிகள் மிக மோசமாக இருப்பதாக இதில் ஆடிய அனைத்து அணிகளும் புகார் கூறி விட்டன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து என பல அணிகளை சேர்ந்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் இந்த ஆடுகளத்தில் அவுட் பீல்டு பகுதி மோசமாக இருப்பதாக கூறி இருந்தனர்.
அதாவது, பிட்ச் தவிர உள்வட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதில் புற்கள் அதிகமாக இருக்க வேண்டும். மேலும், ஒரு பீல்டர் ஓடி வரும் போது வழுக்கி விடும் வகையில் மண் மற்றும் புற்கள் இருக்கக் கூடாது.
தரம்சாலா மைதானத்தில் உலகக்கோப்பை தொடங்கும் முன்பே வேறு ஒரு பிரச்சனையும் இருந்தது. அப்போது அவுட்பீல்டில் பூஞ்சை தொற்று இருப்பதை கண்டுபிடித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). ஆனால், அப்போது ஏதோ செய்து போட்டிகளை நடத்த ஒப்புதல் வாங்கி விட்டது பிசிசிஐ.

அதன் பின் அங்கே அவுட்பீல்டு பகுதி சறுக்கி விடுவதை பல அணிகளும் புகாராக கூறின. ஆனால், அதை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. அங்கே பீல்டிங் செய்தால் வீரர்கள் காயத்தில் சிக்கிக் கொள்வார்களோ என அஞ்சுவதாக ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் கூறி இருந்தார். அப்போதெல்லாம் அதை கொஞ்சம் கூட மதிக்கவில்லை பிசிசிஐ.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து போட்டியில், ரோஹித் சர்மா 10வது ஓவரின் போது பந்தை பிடிக்க ஓடி வரும் போது வழுக்கி விழுந்து அவர் கை விரல்கள் அவர் காலுக்குள் சிக்கிக் கொண்டது. அது அவரது விரல்களில் லேசான காயத்தை ஏற்படுத்தியது.
அதனால், மூன்று ஓவர்கள் களத்தை விட்டு வெளியேறிய அவர் கட்டு போட்டுக் கொண்டு வந்தார். இந்த விரல்களுடன் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பணக்கார கிரிக்கெட் போர்டு என்ற அதிகாரத்தில் இருந்த பிசிசிஐக்கு இப்போதாவது தங்கள் தவறு உரைக்குமா? இனியாவது அந்த அவுத்பீல்டை சரி செய்ய முயல்வார்களா?