
சிறந்த தொடக்கம்
இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மயங்க் அகர்வால் 18 ரன்களுக்கு வெளியேறினாலும், சுப்மன் கில் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். அதன்பின்னர் வந்த சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா (26), அஜிங்கியா ரகானே (35) ஆகியோர் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் இந்திய அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கவனம் ஈர்த்த இளம் வீரர்
அந்த சமயத்தில் தான் அனைவரின் பார்வையும் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் மீது திரும்பியது. தனது முதல் சர்வதேச டெஸ்டில் விளையாடும் ஸ்ரேயாஸ், எந்தவித பதற்றமும் இன்றி சீரான வேகத்தில் ரன்களை குவித்தார். மறுமுனையில் உறுதுணையாக ஜடேஜா நிற்க, ஸ்ரேயாஸ் ஐயர் முதல் நாளின் முடிவில் அரைசதம் கடந்து அசத்தியிருந்தார்.

முதல் சதம்
இந்நிலையில் இன்று காலை முதல் செஷனிலேயே தனது ரன் வேகத்தை அவர் அதிகரித்துவிட்டார். 75 ரன்களில் இருந்த அவர், மளமளவென பவுண்டரிகளை விரட்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்திய அணியில் கலக்கிய ஜாம்பவான்களின் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார்.

மைல்கல்
இந்திய கிரிக்கெட்டில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த 16வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். அதிலும் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே சதமடித்த 3வது வீரர் ஆவார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான சவுரவ் கங்குலி, விரேந்தர் சேவாக், முகமது அசாரூதின், ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது ஸ்ரேயாஸும் இணைந்திருப்பதால், இவரும் வரும் காலங்களில் கலக்குவார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரேயாஸின் விக்கெட்
முதல் சதத்தை பூர்த்தி செய்யும் வரை சற்று நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ், அதன்பிறகு அதிரடி காட்ட முயன்றார். ஆனால் சவுத்தி வீசிய பந்தில் அவுட்டானார். மொத்தம் 171 ரன்களை சந்தித்த அவர், 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்து வலுவாக உள்ளது.


Click it and Unblock the Notifications