தரம்சாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் ஆனார்.
எதிரில் நின்ற விராட் கோலி ஓடி வராமல் போனதால் தான் சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் ஆனார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரசிகர்கள் பலரும் விராட் கோலி சுயநல ஆட்டம் ஆடியதால் தான் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார் என சமூக ஊடகங்களில் கொதித்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் நடந்தது என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 46, சுப்மன் கில் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 33, கே எல் ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
விக்கெட்கள் விழுந்தாலும் விராட் கோலி நிலையாக நின்று அரைசதம் அடித்து ஆடி வந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தார். அவர் நிதானமாக ரன் எடுக்கத் துவங்கினார். ட்ரென்ட் போல்ட் வீசிய 34வது ஓவரின் ஐந்தாவது பந்தை கவர் திசையில் தட்டி விட்ட சூர்யகுமார் யாதவ் சிங்கிள் ரன் ஓடினார்.

ஆனால், எதிர்முனையில் இருந்த விராட் கோலி, பந்து பீல்டரை தாண்டி போகிறதா என உறுதிப்படுத்துவதில் குறியாக இருந்தார். சூர்யகுமார் யாதவ் வருவதை அவர் பார்க்கவே இல்லை. அப்போது பந்தை பிடித்த சான்ட்னர், நேராக போல்ட்-இடம் பந்தை வீசினார்.
அப்போது சூர்யகுமார் யாதவ் முக்கால்வாசி தூரத்தை கடந்து இருந்தார். சான்ட்னர் பந்தை எறியும் போது தான் கோலி, சூர்யகுமார் ஓடி வருவதையே பார்த்தார். ஆனால், போல்ட் பந்தை, விக்கெட் கீப்பர் லாதம் வசம் வீசிய உடன், தான் ரன் அவுட் ஆவதை உறுதி செய்த சூர்யகுமார் திரும்பி ஓடினார். கோலி அப்போது எதிர்முனை கிரீசுக்குள் சென்று தான் ரன் அவுட் ஆகாமல் இருப்பது உறுதி செய்து கொண்டார். டாம் லாதம், போல்ட் வீசிய பந்தை பிடித்து சூர்யகுமார் யாதவ்வை ரன் அவுட் செய்தார்.
அதைக் கண்ட ரசிகர்கள் பலரும் சூர்யகுமார் யாதவ் ஓடி வந்த போது விராட் கோலி ஓடி வராமல் வேடிக்கை பார்த்தது தவறு, அத்துடன் சூர்யகுமார் யாதவ் ஓடி வரும் போதே கோலியும் ஓடத் துவங்கி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை ஓடி இருக்க முடியும் என்றனர். விராட் கோலி தன் விக்கெட்டை காப்பாற்ற சுயநலமாக செயல்பட்டு சூர்யகுமார் யாதவை அவுட் ஆக்கி விட்டார் என்று குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
ஆனால், இந்த ரன் அவுட்டில் இருவரு மீதுமே தவறு உள்ளது. முதலில் 4 விக்கெட் வீழ்ந்த நிலையில், சிங்கிள் ரன்னை எடுக்கும் போது பந்து பீல்டரை தாண்டி செல்கிறதா? என பார்ப்பதே சரியாக இருக்கும். அதை தான் கோலி செய்தார். சூர்யகுமார் யாதவ் அதை செய்யவில்லை.
மறுபுறம், சூர்யகுமார் யாதவ் ஓடத் துவங்கியதை கோலி கவனித்திருக்க வேண்டும். ரன் ஓட வேண்டாம் என முன்பே அவருக்கு சைகை செய்து இருக்க வேண்டும். அதை செய்யவில்லை. எனவே, இருவரும் தவறு செய்துள்ளனர். கோலி சுயநலமாக இருந்தார் என்பதை இந்த விஷயத்தில் ஒப்புக் கொள்ள முடியாது.