
மலைக்க வைத்த டிம்
முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபர்ட் துவக்க வீரராக களம் இறங்கி அதிரடி காட்டினார். அவர் தனது ஆட்டத்தில் 7 ஃபோர், 6 சிக்ஸர் என பந்தை சிதறடித்தார். 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்து மலைக்க வைத்தார்.

காரணம் என்ன?
இவரது அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 219 ரன்களை எட்டியது. இந்தியா 139 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து, படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த டிம்மின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள் நியூசி. வீரர் பிரென்டன் மெக்குல்லம் மற்றும் உலகக்கோப்பை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

பால்ய கால ஹீரோ
முதல் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிம், பிரென்டன் மெக்குல்லம் தன் பால்ய கால ஹீரோக்களில் ஒருவர் என குறிப்பிட்டார். மெக்குல்லம் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போனவர். அவர் தான் தன் ஹீரோ எனக் குறிப்பிட்ட டிம் அவரைப் போலவே துவக்க வீரராக இறங்கி ருத்ர தாண்டவம் ஆடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உலகக்கோப்பை தான் குறி
அடுத்து தான் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். ஆனால், தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கான காரியங்களில் ஈடுபடுவேன் என்றார் டிம். இதன் மூலம், உலகக்கோப்பையை டிம் குறிவைத்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

கவனத்தை ஈர்த்துள்ளார்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாத டிம், டி20 தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்படி ஒரு அதிரடி துவக்க வீரரை தேர்வு செய்ய எந்த அணியும் ஆசைப்படும் என்பதில் சந்தேகமில்லை.

பரிசோதனை செய்த இந்தியா
இந்தியா முதல் டி20 போட்டியில் உலகக்கோப்பைக்கு வேண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பலத்த தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், முக்கிய வீரர்கள் பும்ரா, ஷமி, கோலி இல்லாத இந்திய அணி தான் தோல்வி அடைந்தது என்பதால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications