வாய்ப்பு கிடைக்குமா?
இந்திய அணியின் கேப்டன் கோலி கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால், இந்திய அணியில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், அது 19 வயதே ஆன இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதே இப்போது உள்ள கேள்வி.
ஷுப்மன் கில் அதிரடி பார்ம்
ஷுப்மன் கில் கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்த அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் இருந்து அதிரடி பார்மில் இருக்கிறார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகள், இந்தியா ஏ ஆடிய போட்டிகள் என அனைத்திலும் தன் முத்திரையை பதித்துள்ளார்.
முன்னாள் வீரர்கள் ஆதரவு
ஷுப்மன் கில், கோலியின் இடத்திற்கு சரியான பேட்ஸ்மேன் எனவே அவரை பரிசோதித்து பார்க்க வேண்டும் என கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
தோனி ஆடுவாரா?
கோலி ஓய்வில் இருக்கும் நிலையில், தோனி காயத்தால் மூன்றாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் நான்காவது போட்டியில் ஆடுவாரா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது. தோனி களமிறங்குவது சந்தேகம் என்றால், அணியில் ஷுப்மன் கில் வாய்ப்பு பெறுவார் என தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் அல்லது ஷுப்மன் கில்
ஒருவேளை தோனி அணிக்கு திரும்பினால், தினேஷ் கார்த்திக் - ஷுப்மன் கில் இடையே யாருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பார்க்க வேண்டும். கடைசி இரு ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தான் கேப்டன் என்பதால் அவர் தான் இந்த முடிவை எடுக்க வேண்டும்.
உலகக்கோப்பையில் வாய்ப்பு
இந்திய அணி தற்போது உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் அணித் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. 19 வயதே ஆகும் ஷுப்மன் கில்-க்கு இப்போது அணியில் வாய்ப்பு அளித்தாலும், உலகக்கோப்பையில் முக்கிய போட்டிகளின் போது வேறு வீரர் காயமடைந்தாலும், இவரை பயன்படுத்த ஒரு தயக்கம் இருக்கும். எல்லாம் ரோஹித் கையில் தான் இருக்கிறது.