மும்பை: இந்திய அணியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, இஷான் கிஷனை சேர்ப்பது 'சர்க்கஸ் செயல்’ என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சித்துள்ளார். இது அணியின் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று அவர் இந்திய அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சுப்மன் கில்லுக்கு வழிவிடுவதற்காக பல மாதங்கள்நடுவரிசையில் விளையாடிய சாம்சன், பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். நியூசிலாந்து டி20 தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், முதல் இரண்டு போட்டிகளில் முறையே 6 மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

திலக் வர்மா காயத்தால் விலகிய நிலையில், மாற்று விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இரண்டாவது போட்டியில் 76 ரன்கள் விளாசினார். இதனால், சாம்சனுக்குப் பதிலாக கிஷனுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பேசிய அஷ்வின், “சாம்சனை அணியில் இருந்து நீக்குவது குறித்து இவ்வளவு சீக்கிரம் சிந்திப்பதே தவறு. இந்தியா முன்பு சஞ்சு நன்றாக விளையாடியபோது அவருக்கு வாய்ப்பளித்து, இப்போது இஷான் கிஷன் நன்றாக ஆடுவதால் அவரை அணியில் சேர்ப்பது போன்ற 'சர்க்கஸ் செயல்களை’ தொடர்ந்து செய்தால், அது இந்திய அணிக்கு எப்படி முடிவடையும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை,” என்றார்.
“ஓய்வறையின் உள்ளே இது சரியான சூழலை உருவாக்காது. இடங்களுக்குக் கடுமையான போட்டி இருக்கிறது, ஆனால் இந்த மாற்றத்திற்கு இன்னும் மிகவும் முன்கூட்டியே ஆகிவிட்டது. இது மிகவும் அநியாயமானது. இந்த தொடக்கக் கூட்டணி கடந்த இரண்டு போட்டிகளாகத்தான் மீண்டும் அமைக்கப்பட்டது. ஒரு வீரர் அதிரடி ஷாட்டை விளையாடும்போது ஆட்டமிழந்துள்ளார். அதற்காக நீங்கள் அவரைத் தண்டித்து, மாற்று வீரராக அமர்த்தினால், அந்த வீரரின் சிறந்த ஆட்டத்தை எப்படி காண்பீர்கள்?”
“அது உணர்ச்சிவசப்பட்ட முடிவோ அல்லது அவர் அமைதியற்று விளையாடியதோ அல்ல. அவர் பந்தைப் பார்த்து அதை அடிக்க முயற்சித்தார். அப்படித்தான் உள்ளுணர்வுடன் பேட் செய்ய வேண்டும், ஆனால் அது அவருக்குச் சாதகமாக அமையவில்லை,” என்று தெரிவித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.