அபுதாபி: 2025 ஆசியக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக வீழ்த்தி, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. இதன் மூலம் வெல்ல முடியாத ஒரு அணி என ரசிகர்கள் சிலரும், முன்னாள் வீரர்களும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு போட்டிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்தால், இந்திய அணியில் சில தவறுகள் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம், டெத் ஓவர் பந்துவீச்சுதான். இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இது, அணியின் டெத் ஓவர் பந்துவீச்சை வெகுவாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே இந்த பலவீனம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அந்தப் போட்டியில் கடைசி ஓவர்களில் அதிரடி பேட்டிங் ஆட போதுமான விக்கெட்டுகள் பாகிஸ்தான் கையில் இல்லாத போதிலும், ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் ஷஹீன் அப்ரிடி இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அதுவே இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனத்தை காட்டுவதாக இருந்தது.
ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்தவர் அர்ஷ்தீப் சிங். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் அவரது எகானமி ரேட் 9.56 ஆக உள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு இது சுமார் 11.59 ஆக உள்ளது. இது, கடைசி ஓவர்களில் விக்கெட் எடுப்பதை விட, ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அர்ஷ்தீப் எவ்வளவு சிறந்தவர் என்பதைக் காட்டுகிறது.
மேலும், ஜஸ்பிரித் பும்ராவை பயன்படுத்தும் முறையும் இந்தச் சிக்கலை அதிகரிக்கிறது. இரண்டு போட்டிகளிலும், இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ராவின் மூன்று ஓவர்கள் பவர்பிளேயிலேயே வீசப்பட்டுவிட்டது. அதனால் அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அர்ஷ்தீப் சிங் இருந்தால் அவர் பவர்பிளேவில் பும்ராவுடன் இணைந்து 2 ஓவர்கள் வீச முடியும்.
பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனின் பங்கு என்ன என்பது இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் புரியாத புதிராகவே உள்ளது. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் இடது-வலது கை பேட்டிங் காம்பினேஷன் மீதான பிடிவாதம் காரணமாக பாகிஸ்தான் போட்டியில் திலக் வர்மா ஆட்டமிழந்த பிறகு சிவம் துபேவை களமிறக்கி இருந்தார்.
இது சாம்சனின் பேட்டிங் இடம் குறித்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. சூர்யகுமார் யாதவின் அபாரமான பேட்டிங்கால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம்சனுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. ஒருவேளை, ஒரு பெரிய போட்டியில் சூர்யகுமார் யாதவ் சொதப்பினால், அப்போது தேவையான பயிற்சி இல்லாமல் சாம்சன் அதிக அழுத்தமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்.
தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது மேல் வரிசையிலோ சஞ்சு சாம்சன் இதுவரை ஆடியதை கருத்தில் கொள்ளும்போது, அவரை ஒரு ஃபினிஷராக மாற்ற முயற்சிப்பது அவரது திறமையை வீணடிக்கும் செயலாகவே உள்ளது.
சூர்யகுமார் யாதவ்வின் கேப்டன்சி, பீல்டிங் அமைப்பதில் சிறப்பாக இருந்தாலும், அவரது திட்டமிடல் சற்றே பிடிவாதமாக இருக்கிறது. போட்டியின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், இரண்டு போட்டிகளிலும் பும்ரா பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான இந்த உத்தி அர்த்தமுள்ளதாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிந்தது.
ஒருவேளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால், டெத் ஓவர்களில் பும்ரா இல்லாதது இந்தியாவை கடுமையாகப் பாதித்திருக்கும். சிறந்த பேட்டிங் வரிசைகளைக் கொண்ட அணிகள், பும்ராவின் ஓவர்களைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டு, தங்களது சிறந்த ஹிட்டர்களை இறுதி ஓவர்களுக்காகத் தயார்படுத்தும் உத்தியைக் கையாளக்கூடும். குரூப் சுற்றில் கிடைத்த இந்த இரண்டு வெற்றிகள் அணிக்கு உத்வேகத்தை அளித்தாலும், அணியில் இருக்கும் சில பலவீனங்கள் சூப்பர் 4 சுற்றுக்கு முன் சரிசெய்யப்பட வேண்டும்.