அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில், ஓமன் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்ட விதம், ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. வெறும் வெற்றியைத் தாண்டி, ஒரு மூத்த வீரராக விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய இந்தச் செயல் பாகிஸ்தான் அணிக்கான பதில் என இந்திய ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய போட்டியில் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியுடன் கை குலுக்கவில்லை என்ற சர்ச்சை பெரிதாக வெடித்ததை அடுத்து, சூர்யகுமாருக்கு விளையாட்டு உணர்வு இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் தான், இந்தியா - ஓமன் போட்டி முடிந்ததும், ஓமன் வீரர்கள் சூர்யகுமாரை சூழ்ந்துகொள்ள, அவர் அவர்களுக்கு டி20 கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் குறித்து வகுப்பு எடுத்தது போன்ற காட்சி, சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
போட்டிக்குப் பிறகு ஓமன் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் உரையாடியது குறித்து அந்த அணியின் கேப்டன் ஜதிந்தர் சிங் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "சூர்யா எங்களிடம் போட்டி குறித்துப் பேசினார், எங்களைப் பாராட்டியது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது. டி20 போட்டியின் வெவ்வேறு கட்டங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து எங்கள் வீரர்களுக்குக் கேள்விகள் இருந்தன. அவரிடம் உரையாடியது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, தனது புதிய அதிரடி கிரிக்கெட் பாணியிலிருந்து பின்வாங்கவில்லை. தொடக்க வீரர் சுப்மன் கில் விரைவில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் அபிஷேக் ஷர்மா தனது அதிரடியால் ஓமன் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். வெறும் 15 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழந்தார். மூன்றாம் இடத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், அபிஷேக்கின் அதிரடி, அவர் நிலைத்து நின்று தனது ஆட்டத்தைக் கட்டமைக்க உதவியது.
சஞ்சு சாம்சன் ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுமுனையில் திலக் வர்மா (29), அக்சர் படேல் (26) போன்ற வீரர்கள் தங்களது பங்கிற்கு அதிரடி காட்டி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இதில் ஆச்சரியப்படும் விதமாக, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 விக்கெட் வீழ்ந்த பின்னும் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணி, சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜதிந்தர் சிங் மற்றும் ஆமிர் கலீம் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஜதிந்தர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹம்மாத் மிர்சா, ஆமிர் கலீமுடன் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறினார்.
இருவரும் அரைசதம் கடந்து, ஒரு கட்டத்தில் ஓமன் அணி, இந்தத் தொடரின் முதல் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துவிடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். ஆனால், போட்டியின் முக்கியமான தருணத்தில் ஹர்திக் பாண்ட்யா தனது அனுபவத்தைக் காட்டினார்.
முதலில், அபாரமான ஒரு கேட்ச் மூலம் ஆமிர் கலீமை (64 ரன்கள்) வெளியேற்றிய அவர், அடுத்த ஓவரிலேயே ஹம்மாத் மிர்சாவின் (51 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதியில், ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, தோல்வியே சந்திக்காமல் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.