மும்பை: கிரிக்கெட் உலகில் 'இந்தியா - பாகிஸ்தான்' போட்டி என்றாலே தனி மவுசுதான். எல்லைப் பிரச்சனை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதில்லை. இதனால், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு பரம எதிரிகளும் மோதிக்கொள்வதைக் காண முடிகிறது.
கடந்த 2025-ம் ஆண்டு ஆசியக் கோப்பை உட்படப் பல முறை இவ்விரு அணிகளும் மோதின. இந்நிலையில், பிறந்துள்ள 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எப்போது, எங்கே மோதவுள்ளன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐசிசி தொடர்களில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய மோதல் இதுதான். 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.
நாள்: பிப்ரவரி 15, 2026.
இடம்: ஆர். பிரேமதாசா மைதானம், கொழும்பு.
சூழல்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காகப் பொதுவான இடமான கொழும்பில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பைத் தொடரில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் போட்டி என்பதால், களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சொந்த மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்தியப் பெண்கள் அணி, அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்குத் தயாராகி வருகிறது.
நாள்: ஜூன் 14, 2026.
இடம்: எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் (இங்கிலாந்து).
சூழல்: இந்தத் தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதே பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிகளும் இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மிக அவசியமானதாகும்.
ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள அண்டர் 19 உலகக்கோப்பையில் (U-19), இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆரம்பக்கட்ட லீக் சுற்றில் மோத வாய்ப்பில்லை. இந்தியா குரூப் 'ஏ'விலும், பாகிஸ்தான் குரூப் 'பி'யிலும் உள்ளன. சூப்பர் சிக்ஸ் சுற்றிலும் இவை மோதும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இரு அணிகளும் சிறப்பாக விளையாடி அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் மட்டுமே, ஜூனியர் அளவிலான இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் காண முடியும். சமீபத்தில் நடந்த அண்டர் 19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு, ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி பழிதீர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2025-ஐ போல இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் இல்லாவிட்டாலும், பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கவுள்ள உறுதியான மோதல்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளன.