சிட்னி: 2026 டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து ஒரு முக்கிய கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ள இப்போட்டி, உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என கிளார்க் கணித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அழுத்தத்தைச் சமாளிக்க பாகிஸ்தான், தவறிவிட்டதாகவும், களத்திற்கு வெளியே உள்ள பிரச்சனைகள் மற்றும் புறக்கணிப்பு தொடர்பான சர்ச்சை ஆகியவை பாகிஸ்தானுக்கு சாதகமாக இல்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பேசிய கிளார்க் "நான் எப்போதுமே இந்தியா வெல்லும் என்று கூறி வருகிறேன். இந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது ஏற்படும் அழுத்தத்தைப் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே சமாளிக்க முடியவில்லை. பாகிஸ்தான் இப்போதும் சில களத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. அந்த அணி விளையாடுமா இல்லையா என்ற பேச்சு கூட, அவர்களுக்கு உதவாது," என்று தெரிவித்தார்.
தற்போது 2026 டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என கிளார்க் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், அவர்கள் சிறந்த நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் சிறந்த நிலையில் இல்லை, பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்."
"இந்தியா சில தவறுகளை செய்தால் தான் அவர்கள் வெல்வார்கள். அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், இந்தியா தான் வெல்லும். இலங்கையில் ஆடுவது இந்தியாவில் ஆடுவதை விட மிகவும் வேறுபட்டது. ஆடுகளங்கள் சற்று அதிகமாகச் சுழலும், மிக மெதுவாகவும் இருக்கும். எனவே, அதிக ஸ்கோர்கள் இருக்காது என நினைக்கிறேன். 190 ரன்கள் சராசரி ஸ்கோராக இருக்கும்," என்று கிளார்க் விளக்கினார்.
"இந்தியா, பாகிஸ்தான் பற்றி கடந்த சில வாரங்களாக நிறைய சர்ச்சை உள்ளது. இந்தியவும் அபார ஃபார்மில் உள்ளது. இது எப்போதும் ஒரு பெரிய போட்டி. சமீபத்திய வெளிச்சம் இந்த ஆட்டத்தை இன்னும் கட்டமைக்கும். உலகக் கோப்பை பார்வையில், எல்லா பேச்சும் இப்போட்டி பற்றிதான்" என கிளார்க் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தாலும், இந்தியாவுக்கு எதிராக விளையாட முதலில் மறுத்தது. எனினும், புறக்கணிப்பு முடிவை வாபஸ் பெற்றதையடுத்து திட்டமிட்டபடி போட்டி நடக்கிறது.