மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் மோதுகிறது என்றாலே உலக அளவில் அது பேசப்படும். கிரிக்கெட் விளையாட்டில் அதிக மக்களால் பார்க்கக்கூடிய போட்டியாக அது இருக்கும் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலே காலியாகிவிடும்.
சாதாரண போட்டிக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்குமான டிக்கெட் விற்பனை பல மடங்கு இருக்கும். ஆனால் தற்போது இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் மோதும் நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது .குறிப்பாக விராட் கோல, ரோகித் சர்மா ஆகியோர் இல்லாததுதான் போட்டிக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றமும், அதன் பின் நடைபெற்ற சம்பவங்களும் தான் இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த போட்டி நடைபெறுவதால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க ஆர்வம் காட்டாததற்கு ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் செய்த ஒரு முட்டாள்தனம் தான் என்று கூறப்படுகிறது.
அதாவது இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க வேண்டும் என்றால் மற்ற ஏழு லீக் ஆட்டத்திற்கான டிக்கெட்டையும் சேர்த்து ஒரே பேக்கேஜ் ஆக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு மற்ற 7 போட்டிகளுக்கும் சேர்த்து நாங்கள் ஏன் டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் கடுப்பாகி இந்த டிக்கெட்டை வாங்கவில்லை.
இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு என பிரத்தியேக டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டது. ஆனால் அதுவும் வழக்கம் போல் விலை கூடுதலாக உள்ளது. அதிகபட்சமாக இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டரை லட்சமும், குறைந்தபட்சமாக 28 ஆயிரம் ரூபாயும் வரை டிக்கெட் விற்பனை இருக்கிறது.
இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என பல ரசிகர்கள் இந்த போட்டியை புறக்கணித்து விட்டனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை பயன்படுத்தி துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் பெரிய ஸ்கிரீனை கட்டி இலவச உணவு குளிர்பானம் என அனைத்தையும் வழங்கி டிக்கெட் விற்பனையை செய்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று போட்டியை பார்க்காமல் இது போல் ஹோட்டலுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.