துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்பே, கள்ளச்சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 14 அன்று துபாயில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஒன்றின் விலை, கள்ளச்சந்தையில் 15.75 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில், சில மூன்றாம் தரப்பு இணையதளங்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளைப் பட்டியலிட்டு உள்ளன.

அதிலும், இந்த போலி டிக்கெட்களை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இந்த இணையதளங்களில் குறைந்தபட்ச விலையாக 26,256 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15.75 லட்சம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் எச்சரிக்கை
இந்த அதீத விலையேற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் போட்டி மீதான ஆர்வம் இம்மியளவும் குறையவில்லை. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் ஏப்ரல் 26 அன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும், டிக்கெட்டுகளுக்கான தேவை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
போலி இணையதளங்களில் டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன், முறையான இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணிக்கு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், இருதரப்பு தொடர்களுக்குத் தடை நீடிக்கிறது. இதன் காரணமாகவே, ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் இரு அணிகளும் மோதுகின்றன.
இந்தத் தொடரில், லீக் சுற்றில் ஒருமுறையும், சூப்பர் 4 சுற்றில் தகுதி பெற்றால் இரண்டாவது முறையும், இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மூன்றாவது முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளது. சர்ச்சைகள், புறக்கணிப்பு கோஷங்கள் என அனைத்தையும் தாண்டி, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் ஆர்வம் குறையவில்லை என்பதையே இந்த டிக்கெட் விவகாரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.