துபாய்: 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14 அன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா சவால் விடுத்துள்ளார். துபாயில் நடந்த தனது முதல் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் அகா, இந்திய அணியுடனான மோதலுக்கு தனது அணி முழுமையாகத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் அனுபவம் குறைந்த ஓமன் அணிக்கு எதிராகவே பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் பலரும் திணறினார்கள். இப்படி இருக்க பாகிஸ்தான் கேப்டனோ இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

இந்தியாவுடனான போட்டி குறித்துப் பேசிய சல்மான் அகா, "கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நாங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். சமீபத்தில் முத்தரப்புத் தொடரை வென்றோம். இங்கும் ஒரு சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். நாங்கள் எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால், எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்ட சிறந்த அணியாக நாங்கள் இருக்கிறோம்" என்று போட்டிக்கு பிந்தைய பேட்டியில் கூறினார்.
இந்த வெற்றியின் நாயகனாக முகமது ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தனது பேட்டிங் குறித்துப் பேசிய ஹாரிஸ், "அணி நிர்வாகம் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ, அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அடுத்த போட்டியில் என்னை 10-வது வீரராகக் களமிறக்கினாலும், நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.:
"கடந்த 5-6 வருடங்களாக பாகிஸ்தான் அணிக்காகவும், பி.எஸ்.எல். தொடரில் பல்வேறு அணிகளுக்காகவும் நான் அதிரடியாகவே விளையாடி வருகிறேன். அதுதான் எனது பலம். கேப்டனும் அனைத்து வீரர்களுக்கும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்," என்று கூறினார் ஹாரிஸ்.
ஓமனுக்கு எதிரான இந்த வெற்றி, இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இருப்பினும், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 13 டி20 போட்டிகளில், இந்தியா 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஆசியக் கோப்பை வரலாற்றிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது, பாகிஸ்தான் 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி பெரும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது. அமீரக அணியை 57 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.