துபாய் : அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை, பாகிஸ்தான் வீழ்த்தியது.
குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் பெரிய சாதனை செய்து விட்டதாக இந்த வெற்றியை கொண்டாடினார்கள். அத்துடன் விடாமல், போட்டி முடிந்த உடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்திய அணியையும், ரசிகர்களையும் சீண்டவே இப்படி செய்து இருக்கிறார்கள் என சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு, பதற்றம் இரு அணிகளுக்கும் இருக்கும். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதே இல்லை. இந்தியா எட்டு முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் மோதி எட்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.
ஆனால், டி20 உலகக்கோப்பையில் 7 முறை மோதி அதில் இந்தியா 5 வெற்றிகளையும், பாகிஸ்தான் 1 வெற்றியையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. பாகிஸ்தான் பெற்ற அந்த ஒரு வெற்றி 2021 டி20 உலகக்கோப்பையில் கிடைத்தது. அப்போது இந்திய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி செல்பி எடுத்தது.
தற்போது அதே விஷயத்தை அண்டர் 19 பாகிஸ்தான் அணியும் செய்துள்ளது. இந்திய அண்டர் 19 அணியை வீழ்த்திய பின் செல்பி எடுத்து இருக்கின்றனர். அது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அதை வைத்து இந்திய அணியை கிண்டல் செய்தனர். அதனால், இந்திய ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.