துபாய் : அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங் சுமாராக இருந்த நிலையில், பந்துவீச்சு அதைவிட மோசமாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களால் வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. பாகிஸ்தான் அணியில் ஆசான் ஆவைஸ் சதம் அடித்து அபாரமாக ஆடினார். அந்த அணி 47 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி எங்கே சொதப்பியது?

இந்த ஆசிய கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் மூன்று வீரர்களை தவிர மற்றவர்கள் சொதப்பினர். ஆதர்ஷ் சிங் 62 ரன்களும், கேப்டன் உதய் சஹாரன் 60 ரன்களும், சச்சின் தாஸ் 58 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்களில் கடந்த போட்டியில் ஆல் - ரவுண்டராக கலக்கிய ஆர்ஷின் குல்கர்னி 24 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இந்த நால்வரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து இருந்தனர். தொடர்ந்து விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால் உதய் சஹாரன் மிக நிதான ஆட்டம் ஆடி இருந்தார். 98 பந்துகளில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து டெஸ்ட் ஆட்டம் ஆடியதும் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால், விக்கெட் விழும் போது அவர் 43வது ஓவர் வரை தாக்குப் பிடித்து ஆடியதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஷீசான் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டி நடந்த துபாய் ஆடுகளம் பொதுவாகவே மந்தமானது என்பதால் இந்த ஸ்கோரை வைத்துக் கூட வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
அடுத்து பாகிஸ்தான் அணி சேஸிங் செய்த போது துவக்க வீரர் ஷாமில் ஹுசைன் 8 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் அதன் பின் மற்றொரு துவக்க வீரர் ஷாசைப் கான் மற்றும் மூன்றாம் வரிசை வீரர் ஆசான் ஆவைஸ் போட்டியை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
ஷாசைப் கான் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆசான் சதம் அடித்து கடைசி வரை நின்றார். நான்காம் வரிசை வீரர் சாத் பாய்க் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் முருகன் அபிஷேக் மட்டுமே 2 விக்கெட்கள் வீழ்த்தி ஆறுதல் அளித்தார். மொத்தம் ஏழு பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் பந்து வீசியும் அதில் ஆறு வீரர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. அதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்திய அணி இந்தப் போட்டியில் சொதப்பி இருந்தது. இளம் வீரர்கள் என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. பாகிஸ்தானுடம் முதல் போட்டி என்ற பதற்றமும் கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம். இந்த இளம் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்.