அகமதாபாத் : பாகிஸ்தான் அணி வீரர்கள் ஷாஹித் அப்ரிடியை பார்த்து தான் மோசமாக ஆடி வருகிறார்கள் என குற்றம் சுமத்தி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் கான்.
அதே சமயம், இந்திய அணி வீரர்கள் இன்று சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க காரணமே, சச்சின் டெண்டுல்கர் தான் என இந்திய அணியை புகழ்ந்து இருக்கிறார்.

இன்சமாம் உல் ஹக் காலத்துக்கு பின், பாபர் அசாம் வரும் வரை பாகிஸ்தான் அணியில் நல்ல பேட்ஸ்மேன் என சொல்லிக் கொள்ளும்படி யாருமே இல்லை. பல வீரர்களும் வருவதும், போவதுமாகவே இருந்தனர். போட்டிகளில் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர். வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தனர்.
அதற்கு காரணம், முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் ஷாஹித் அப்ரிடி தான் இதற்கு காரணம் எனக் கூறி இருக்கிறார் பாஸித் கான். அப்ரிடி அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். ஒருநாள் போட்டியில் அதிகவேக சதம் அடித்த சாதனையை நீண்ட காலம் வைத்திருந்தார். ஆனால், எப்போதுமே அதிரடி ஆட்டம் ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை பறி கொடுப்பார்.

ஆனால், இந்திய அணி சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய காலத்தில் விராட் கோலி என நிலையான பேட்ஸ்மேன்கள் இளம் வீரர்களுக்கு முன் மாதிரியாக இருந்தார்கள் என பாஸித் கான் இந்திய அணி குறித்து புகழ்ந்து கூறி இருக்கிறார்.
இது பற்றி அளித்த பேட்டியில் "இந்திய அணி எப்போதுமே சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்குகிறது. இந்திய வீரர்கள் தங்கள் முன் மாதிரியாக சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கரை பின்பற்றுகிறார்கள். அதிலும் சச்சின் இந்த விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பலர் நன்றாக ஆட காரணமே சச்சின் டெண்டுல்கர் தான். பாகிஸ்தானில் ஷாஹித் அப்ரிடி பெரிய பெயரைப் பெற்றார். நம் அணியின் பல வீரர்கள் அவரை பின்பற்றத் தொடங்கினார்கள். அது நம் அணியை மோசமானதாக மாற்றி இருக்கிறது" என்று கூறி இருக்கிறார் பாஸித் கான்.