துபாய்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் குறி வைத்து அட்டாக் செய்திருக்கின்றனர். பவர் பிளேவில் பும்ரா வீசிய 3 ஓவர்களில் மட்டும் 6 பவுண்டரிகள் உட்பட 34 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் பும்ராவின் மோசமான செயல்பாடாக இது அமைந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் - ஃபர்ஹான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானமாக ஆடினர்.

ஆனால் 2வது ஓவரை வீசிய பும்ரா பவுலிங்கில் ஜமான் அதிரடியாக 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்களை விளாசினார். அதிலும் டவுன் தி டிராக் இறங்கி வந்து ஒரு பவுண்டரியை மிட் ஆஃப் திசையில் விளாசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பும்ரா வீசிய 4வது ஓவரில் ஃபர்ஹான் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, மீண்டும் 5வது பந்திலும் ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார்.
இதனால் எளிதாக இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மீண்டும் பும்ரா அழைக்கப்பட்டார். இதன் மூலமாக இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு விக்கெட் தேவையாக இருப்பது தெரிய வந்தது. இதனையறிந்த பாகிஸ்தான் அணி, கொஞ்சம் கூட அசராமல் பும்ராவை மீண்டும் அட்டாக் செய்தது.
இந்த ஓவரில் பும்ரா வீசிய 2வது பந்தில் ஒரு பவுண்டரி பறக்க, மீண்டும் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை ஃபர்ஹான் விளாசினார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை சேர்த்தது. இந்த 55 ரன்களில் பும்ரா வீசிய 3 ஓவர்களில் மட்டும் 34 ரன்கள் விளாசப்பட்டுள்ளது.
ஓவருக்கு 2 பவுண்டரி என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா குறி வைத்து அட்டாக் செய்திருக்கின்றனர். இதன் மூலமாக பும்ரா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவர் பிளே செயல்பாடாக இது அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியொன்றில் 3 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்ததே பும்ராவின் மோசமான செயல்பாடாகும்.
ஆனால் இந்த போட்டியில் 34 ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் பும்ரா கவனமாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக தீவிரமான திட்டங்களுடன் களமிறங்கி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.