அகமதாபாத் : இந்தியா = பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
42.5 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், பும்ரா மிக சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியை திணற வைத்து இந்தியா ஆதிக்கம் செலுத்த உதவினர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 20 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இமாம் உல் ஹக் பாண்டியா பந்துவீச்சில் பவுண்டரிகள் அடித்தாலும், பின் அதே ஹர்திக் பாண்டியாவின் பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார் கேப்டன் பாபர் அசாம் ஒரு எல்பிடபுள்யூ அவுட்டில் இருந்து அம்பயர் தீர்ப்பால் தப்பி அரைசதம் அடித்து 50 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சவுது ஷக்கீல் 6, இப்திகார் 4 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் வெளியேறினர். ரிஸ்வான் சற்று சிறப்பாக ஆடி 49 ரன்கள் எடுத்தாலும் அவரும் பும்ரா வீசிய பந்தில் பவுல்டு அவுட் ஆகி பின்னேயே சென்றார்.
ஷதாப் கான் 2, முகமது நவாஸ் 4, ஹசன் அலி 12, ஷஹீன் ஷா 2, ஹாரிஸ் 2 ரன்கள் சேர்த்தனர். இரண்டாம் வாய்ப்பாடு போல இருந்தது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர்கார்டு.
இந்தியாவின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்குர் தவிர மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். எனினும், இதில் பும்ரா, குல்தீப் யாதவ் தான் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். பும்ரா 7 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
பாண்டியா 6 ஓவரில் 34 ரன்கள் கொடுத்தும், ஜடேஜா 9.5 ஓவரில் 38 ரன்கள் கொடுத்ததும் இருந்தனர். தாக்குர் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 12 ரன்கள் கொடுத்து இருந்தார்.