மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையில் இந்தியா - பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள ஆட்டம் மார்ச் 1ஆம் தேதி லாகூர் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் பயணிப்பது குறித்தோ, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணைக்கோ பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கவுள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. இது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐசிசி பாதுகாப்பு குழு ஆய்வு செய்துள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 15 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிபி சார்பில் ஐசிசி-க்கு சமர்ப்பித்துள்ளார். அதன்படி லாகூர் மைதானத்தில் 7 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் கராச்சியில் 3 போட்டிகளையும், ராவல்பிண்டியில் 5 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடவுள்ள அத்தனை போட்டிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூரிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரையிறுதிப் போட்டிகள் கராச்சி மற்றும் ராவல்பிண்டியிலும், இறுதிப்போட்டி லாகூரிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி லாகூருக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள ஆட்டம் லாகூர் மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால் பிசிசிஐ தரப்பில் வரைவு அட்டவணைக்கான எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஐசிசி தரப்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவுள்ள 8 நாடுகளில் பிசிசிஐ தவிர்த்து மற்ற 7 நாடுகளும் அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளன. இதுவரை பிசிசிஐ மட்டும் எந்த முடிவையும் கூறவில்லை. வழக்கமாக எந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிராக முடிவு எடுக்குமாறு ஐசிசி தரப்பில் வலியுறுத்தப்படாது. இதனால் பிசிசிஐ தரப்பில் விரைவில் அரசிடம் அனுமதி கேட்டு முடிவை கூறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.