இஸ்லாமாபாத்: உலக கோப்பையை விட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில்தான் பல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் பாகிஸ்தான் முன்நாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 14ம்தேதி தொடங்க உள்ள நிலையில், பதினைந்தாம் தேதி இந்தியா-பாகிஸ்தான் பலப் பரிட்சை நடத்த உள்ளன. 1992க்கு பிறகுதான் இவ்விரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் மோதும் வாய்ப்பை பெற்றன. ஆனால் அனைத்து போட்டியிலும், இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலக கோப்பை போட்டியிலும், இந்தியா தனது பெருமையை தக்க வைத்துக்கொண்டு, பாகிஸ்தானை வீழ்த்தும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த அக்தர் இதுகுறித்து கூறியதாவது: இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி, இந்தியா-பாகிஸ்தானுக்கு நடுவேயானதுதான்,. பெரும்பாலான ரசிகர்கள் உலக கோப்பையைவிடவும், இவ்விரு அணிகள் மோதுவதைத்தான் பெரிய நிகழ்ச்சியாக நினைக்கின்றனர்.
130 கோடி மக்கள் இந்த போட்டியை நேரலையில் பார்க்க உள்ளதாக கூறப்படுவதில் இருந்தே இதன் முக்கியத்துவம் தெரியும். இரு நாட்டு வீரர்களுக்குமே, இந்த போட்டியின்போது மிகவும் நெருக்கடி இருக்கும். பிற போட்டிகளைவிட இவ்விரு அணிகளும் மோதும் போட்டியில் இரு நாட்டு வீரர்களுமே முழு திறமையையும் காண்பித்து விளையாடுவார்கள்.
உலக கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை என்ற நம்பிக்கை தொடருகிறது. ஆனால் கடவுள் விருப்பத்தால், அது விரைவில் மாறும். இவ்வாறு அக்தர் கூறினார்.