துபாய்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஃபகர் ஜமான் கொடுத்த கேட்சை இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சரியாக பிடித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 3வது நடுவரின் ரீப்ளேவில் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பந்து தரையில் விழுந்து எழும்பியது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் நடுவர் அவுட் கொடுத்திருப்பது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் மீண்டும் சூர்யகுமார் யாதவ் கைக் குலுக்க மறுத்தார்.

இதன்பின் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபகர் ஜமான் - ஃபர்ஹான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் இரு பேட்ஸ்மேன்களும் நிதானமாக ஆடினர். ஆனால் பும்ரா வீசிய 2வது ஓவரில் ஜமான் அதிரடியில் விளாசி தள்ளினார்.
டவுன் தி டிராக் இறங்கி வந்து 2 பவுண்டரிகளை விளாச, ஒட்டுமொத்த மைதானமும் அதிரத் தொடங்கியது. இந்த நிலையில் 3வது ஓவரை வீச மீண்டும் ஹர்திக் பாண்டியா வந்தார். அந்த ஓவரிலும் ஒரு பவுண்டரியை ஜமான் விளாச, 3வது பந்தில் ஹர்திக் வேகத்தை குறைத்தார். இதில் பேட்டில் எட்ஜாகி, நேராக சஞ்சு சாம்சன் கைகளில் சென்று விழுந்தது.
ஆனால் சஞ்சு சாம்சன் முறையாக கேட்சை பிடித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இதனால் தீர்ப்பு 3வது நடுவரின் வசம் அளிக்கப்பட்டது. அப்போது ரீ-ப்ளேவில் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பந்து ஒரு முறை பிட்சாகியது தெளிவாக தெரிந்தது. வேறு கேமரா ஆங்கிள் இல்லாததால், கொஞ்சம் ஜூம் மட்டும் செய்து 3வது நடுவர் பார்த்தார். அதில் பந்து கிளவ்ஸில் பிட்சாகி கைகளுக்குள் சென்றது.
ஆனால் ஜமான் நிச்சயம் கேட்ச் பிடிப்பதற்கு முன் பந்து தரையில் பிட்சாகியதாக நம்பினார். இந்த சூழலில் திடீரென 3வது நடுவர் அவுட் என்று தீர்ப்பு வழங்கினார். இதனால் ஃபகர் ஜமான் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியுடன் ஓய்வறை நோக்கி நடந்து சென்றார். அங்கு சென்று பயிற்சியாளரிடம் புகார் அளித்தார். அதேபோல் பாகிஸ்தான் வீரர்களும் 3வது நடுவரின் தீர்ப்பால் டென்ஷனாகினார்கள்.