துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமான வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள், கிரிக்கெட் உலகைத் தாண்டி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த வெற்றி குறித்து பேசுகையில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற வார்த்தையை பயன்படுத்தியது மேலும் கவனத்தை பெற்றது.
முன்னதாக போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினர். எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவின் (47*) பொறுப்பான ஆட்டத்தால் 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "இதுவே சரியான தருணம். பெஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணையாக நிற்கிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகளுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறோம்," என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.
கேப்டனின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ஒளிபரப்பாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசுகையில், "ஒரு அணியாக, நாங்கள் பெஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஒற்றுமையைத் தெரிவிக்க விரும்பினோம். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய நமது வீரர்களுக்கு நன்றி" என்று கூறினார்.
இதன் வெளிப்பாடாகவே, போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். வழக்கமாக, போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது மரபு. ஆனால், இந்த முறை இந்திய வீரர்கள் அந்தச் சம்பிரதாயத்தைத் தவிர்த்து, தங்கள் எதிர்ப்பையும், நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் 2 வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. அடுத்து, செப்டம்பர் 19 ஆம் தேதி ஓமன் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.