ஹாங்காங்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை 5 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது, ஹாங்காங் சிக்ஸஸ் என்ற ஆறு ஓவர் போட்டி ஹாங்காங் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் நாடுகள் பங்கேற்று உள்ளன. இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. ராபின் உத்தப்பா தலைமையிலான ஆறு வீரர்கள் கொண்ட இந்திய அணி, பாகிஸ்தான் அணியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

ஒரு ஓவருக்கு சராசரியாக 19.83 ரன்கள் எடுத்து இருந்தது இந்திய அணி. ராபின் உத்தப்பா 8 பந்துகளில் 31 ரன்களும், பாரத் சிப்லி 16 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து இருந்தனர். கேதர் ஜாதவ் 3 பந்துகளில் 8 ரன்களும், மனோஜ் திவாரி 7 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணிக்கு 6 ஓவர்களில் 120 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஒரு ஓவருக்கு 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழக்காமல் இந்த இலக்கை 5 ஓவர்களிலேயே எட்டியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய முகமது அக்லக் மற்றும் ஆசிஃப் அலி சிக்ஸர் மழை பொழிந்தனர். முகமது அக்லக் 12 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார்.
ஆசிஃப் அலி 14 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். அவர் இரண்டு ஃபோர் மற்றும் 7 சிக்ஸ் அடித்து ரிட்டையர்டு ஆனார். அதன் பின் வந்து ஃபஹீம் அஷ்ரப் 5 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் ஒரு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் அதிக அளவில் சிக்ஸ் அடித்ததை அடுத்து அந்த அணி 5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா 8 சிக்ஸ் அடித்த நிலையில், பாகிஸ்தான் 14 சிக்ஸ் அடித்து இருந்தது. இந்த ஆறு ஓவர் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கும் அணியே வெற்றி பெற முடியும் என்பதை சரியாக செய்து காட்டிய பாகிஸ்தான், உத்தப்பா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.