துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
2025 ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன. தொடரின் முடிவுகளைப் பொறுத்து, இறுதிப் போட்டி உட்பட மூன்று முறை கூட இந்த அணிகள் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில்தான், ஹர்பஜன் சிங் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்? இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை," என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது. இந்த பெரிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த நிலைப்பாடு இது முதல் முறையல்ல. சமீபத்தில் நடந்த வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) தொடரில், ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா மற்றும் இர்பான் பதான் உள்ளிட்ட இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டியில் விளையாட மறுத்து, தேசிய நலனைக் காரணம் காட்டி வெளியேறினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை குறித்தும் அவர் குரல் எழுப்பியுள்ளார்.
நாட்டின் மனநிலை இப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுடன் விளையாட பிசிசிஐ எப்படி ஒப்புக்கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஹர்பஜன் சிங்கும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்குவதையும், அவர்களுக்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பகல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவில் தீவிரமான பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், ஹர்பஜன் சிங்கின் இந்தக் கருத்து, விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா அல்லது இதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.