முதல் சந்திப்பு
சிட்னி மைதானத்தில், முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 54*, அஜய் ஜடேஜா 46 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்த வழி செய்தனர். ஆனால், இந்த ஸ்கோரை அடிக்க முடியாத பாகிஸ்தானை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. ஜாவித் மியான்டட் 110 பந்துகளில 40 ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் போட்டி
அடுத்த உலக கோப்பை தொடரில் 1996ம் ஆண்டு பெங்களூரில் பாகிஸ்தானை 39 ரன்கள் வித்தியாசத்தில் தெறிக்க விட்டது இந்தியா. முதலில் பேட் செய்த இந்தியா, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்களை குவித்தது. நவ்ஜோத்சிங் சித்து 93 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் 248 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோற்றது. வெங்கடேச பிரசாத், 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
அதே மான்செஸ்டர்
அடுத்த உலக கோப்பை 1999ல் நடந்தது. நாளை போட்டி நடைபெற உள்ள அதே மான்செஸ்டரில்தான் அப்போதும் இந்தியா-பாகிஸ்தான் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாருதீன் அரை சதங்கள் கடந்தனர். அடுத்து பேட் செய்த பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுத்தார் வெங்கடேச பிரசாத். 5 விக்கெட்டுகளை அள்ளினார். வெறும் 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது பாகிஸ்தான். கார்கில் போருக்கு பிறகு நடந்த இந்த போட்டி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டிலும் வெற்றி கிடைக்காது என்பதை உறுதி செய்வதாக அமைந்தது.
என்னா அடி தெரியுமா
2003ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், செஞ்சூரியனில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. சையது அன்வர் 20வது சதத்தை அந்த போட்டியில் விளாசினார். ஆனால், 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்த, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட்டின் கடவுள் முன்பு அன்வர் செஞ்சுரி அடிபட்டுப்போனது. உலகின் அதிவேக பந்து வீச்சாளர் அக்தர் பந்தை, ஆப்சைடில், அப்பர்-கட் அடித்து, சச்சின் டெண்டுல்கர் சிக்சருக்கு அனுப்பிய காட்சி இன்னும் பல ரசிகர்கள் கண்களில் இருந்து மறையவில்லை. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது இந்தியா.
மீண்டும் சச்சின்
2011ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற போட்டியில், மீண்டும் சச்சின் சாதித்தார். 85 ரன்கள் விளாசினார். இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. வகாப் ரியாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், மிஸ்பா உல் ஹக் மட்டும் சமாளித்து 56 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் நடையை கட்ட, இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா, இலங்கையை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, இந்த உலக கோப்பை சாம்பியனும் ஆனது.
வந்தார் கோலி
கடந்த உலக கோப்பை தொடர் 2015ல் நடந்தபோது, அடிலெய்டில் இரு அணிகளும் மோதின. இந்தியாவின் பேட்டிங் தீபம் சச்சின் தோளில் இருந்து விராட் கோலிக்கு மாற்றப்பட்டிருந்தது. அவரும், 107 ரன்கள் விளாசினார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் விளாசிய முதல் சதமும் அதுதான். இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. முகமது ஷமியின் வேகத்தில் 4 விக்கெட்டுகளை இிழந்து தடுமாறிய பாகிஸ்தான், இறுதியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.