துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் 5 கேட்ச்கள் மற்றும் 1 ரன் அவுட்டை தவறவிட்டிருப்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஃபீல்டிங்கில் சொதப்பி இருக்கின்றனர்.
ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி முதல் 9 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 11 ஓவர்களில் 80 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. முதல் பாதியில் இந்திய பவுலர்கள் சொதப்பினாலும், மிடில் ஓவர்களில் ஓரளவிற்கு ஆட்டத்தை இழுத்து பிடித்துள்ளனர். இருந்தாலும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஏனென்றால் 5 கேட்ச்கள் மற்றும் 1 ரன் அவுட்டை இந்திய அணி வீரர்கள் கோட்டைவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் ஏராளமான மிஸ் ஃபீல்ட்களை செய்ததால், பாகிஸ்தான் அணி ஏராளமான முறை 2 ரன்களை சேர்த்தது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியில் 58 ரன்களை சேர்த்த ஃபர்ஹாம் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.
ஆனால் கையில் லட்டு மாதிரி விழுந்த கேட்சை, அபிஷேக் சர்மா கோட்டைவிட்டார். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் மீண்டும் சயீம் அயூப் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் கோட்டைவிட்டார். இதனை பிடித்திருந்தாலே, பாகிஸ்தான் அணியை முதல் பாதியில் எளிதாக கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
அதேபோல் ஃபர்ஹாம் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா கோட்டைவிட்டதோடு, அதனை சிக்ஸ் லைனிற்குள்ளும் தள்ளிவிட்டார். இதன்பின் பும்ரா வீசிய 19வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரப் கொடுத்த எளிய கேட்சை சுப்மன் கில் கோட்டைவிட்டார். அதேபோல் கடைசி பந்தில் சிவம் துபே கொஞ்சம் பவுண்டரி லைன் அருகில் நின்றிருந்தாலே எளிதாக கேட்ச் பிடித்திருக்கலாம்.
ஆனால் சிவம் துபே கொஞ்சம் முன்பாகவே நின்றதால், சிக்சரை கூட தடுக்க முடியவில்லை. அதேபோல் பாகிஸ்தான் அணி வீரர்களை ரன் அவுட் செய்யும் வாய்ப்பு ஏராளமான முறை கிடைத்தது. ஒருமுறை சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் செய்திருந்தாலும், வருண் சக்கரவர்த்தி ஒரு எளிய ரன் அவுட்டை செய்யாமல் தவறவிட்டார். இதனால் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக அமைந்தது.
இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்து வந்துள்ளது. ஏனென்றால் கேட்ச் பிடிப்பதில் இந்திய அணி இலங்கை மற்றும் ஹாங் காங் ஆகிய அணிகளுக்கு மேல் இருக்கிறது. இந்திய அணி ஃபீல்டர்களின் கேட்ச் விகிதம் 70 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் இந்திய அணி ஃபீல்டிங்கில் கூடுதல் எச்சரிக்கையாக இல்லையென்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.