துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி அபாரமான தொடக்கம் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. ஆனாலும் கடைசியில் திலக் வர்மா இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஃபர்ஹான் 58 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய அஷ்ரப் 8 பந்துகளில் 20 ரன்களும் குவித்தனர்.

இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸ் அடிக்க, இந்திய அணியின் ஆதிக்கம் தொடங்கியது. தொடர்ந்து 2வது ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாச, 3வது ஓவரிலும் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசினார்.
மறுபக்கம் அபிஷேக் சர்மா தன் பங்கிற்கு சிக்ஸ், பவுண்டரி விளாசி தள்ள, இந்திய அணியின் ஸ்கோர் 6 ஓவர்களில் 69 ரன்களாக உயர்ந்தது. அதிரடியாக ரன்களை குவித்த அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் 52 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. இதன்பின் சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி வெளியேற, அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மாவும் 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சன் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்க, இந்திய அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
அப்போது ஹாரிஸ் ராஃப் வீசிய 17வது ஓவரில் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன்பின் ஹர்திக் பாண்டியா அட்டாக்கில் வந்தார். இருவரும் தேவைக்கேற்ப சிக்ஸ், பவுண்டரி அடிக்க, இறுதியாக திலக் வர்மா சிக்ஸ், பவுண்டரி விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.