துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியை போலவே டாஸ் போடப்பட்ட பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் கைகுலுக்க சூர்யகுமார் யாதவ் மறுத்திருக்கிறார். இது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணியால் இந்திய அணியின் தாக்குதலுக்கு கொஞ்சம் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி கம்பேக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் இந்திய அணியை பொறுத்தவரை அத்தனை வீரர்களும் அபாரமான ஃபார்மில் உள்ளனர். சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையை பற்றி கவலை கொள்ளாமல், இறங்கி ஆடுவது கூடுதல் சாதகத்தை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை கட்டுப்படுத்தினாலே, அந்த அணியை எளிதாக வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். டாஸ் போடப்பட்ட பின், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ், நேராக ரவி சாஸ்திரியிடம் சென்று பேச தொடங்கிவிட்டார். இந்த சம்பவம் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
இதன்பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். நேற்றைய ஆட்டத்த்தில் கொஞ்சம் பனிப்பொழிவு இருந்தது. குரூப் சுற்றுப் போட்டிகளில் இருந்தே நாங்கள் நாக் அவுட் போட்டிகளில் விளையாடுவதாக நினைத்தே ஆடி வருகிறோம். அதனால் எந்த மாற்றமும் இல்லை. அபுதாபியில் ஆடிய பிட்ச் முற்றிலும் வித்தியாசமானது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோருக்கு பதில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேசுகையில், நாங்களும் பவுலிங்கையே தேர்வு செய்ய விரும்பினோம். புதிய போட்டி என்பதால் புதிய சவாலுக்கு தயாராக இருக்கிறோம். இந்த பிட்ச் கொஞ்சம் ஸ்லோயராக இருக்கும் என்று நினைக்கிறேன். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக தொடங்க வேண்டும். ஹசன் நவாஸ் மற்றும் குஷ்தில் ஷா இருவரும் ஆடவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.