அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் எல்லாமே சரியாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடிய ஷர்துல் தாக்குர் மீது மட்டும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
ஷர்துல் தாக்குர் ஆல் - ரவுண்டர் என்ற ஒரே ஒரு காரணத்தால் கேப்டன் ரோஹித் சர்மா அவரை அணியில் பிடிவாதமாக சேர்த்து ஆட வாய்ப்பு அளித்து வருகிறார்.
அவர் எட்டாம் வரிசையில் பேட்டிங் செய்வார், அது அணிக்கு இக்கட்டான நிலையில் பலனளிக்கும் என ரோஹித் சர்மா நம்புகிறார். ஆனால், ஷர்துல் தாக்குர் எப்போதுமே பேட்டிங் செய்யப் போவதில்லை. அவரால் அணிக்கு எந்த பயனும் இல்லை என சுட்டிக் காட்டி விளாசி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

ஷர்துல் தாக்குர் அணியிலக் இடம் பெறக் காரணம், ஒரு பந்துவீச்சாளர் இடம் அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பது தான்.
தற்போது இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என்ற இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் நிரந்தரமாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின், வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குர் ஆகிய மூவருக்கு இடையே தான் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றம் இருக்கும்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா போட்டியில் அஸ்வின் ஆடினார். அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் ஷர்துல் தாக்குர் ஆடினார். அப்போது முகமது ஷமி ஆடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தாக்குர் எட்டாம் வரிசையில் பேட்டிங் ஆடும் திறன் கொண்டவர் என்ற அடிப்படையில் வாய்ப்பு பெற்றார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ஷர்துல் பேட்டிங்கில் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுக்கும் ஒரு பந்து வீச்சாளர். அவர் 20 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க மாட்டார். அவர் அப்படிப்பட்ட வீரர் அல்ல. அவர் அப்படி விளையாடுவதில்லை. இப்போதைக்கு அணிக்கு தேவை 8வது வரிசையில் குறைந்த பட்சம் பேட்டிங் ஆடத் தெரிந்த ஒரு வீரர். அதனால்தான் ஷர்துல் இருக்கிறார், ஆனால் முகமது ஷமி அணியில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

"அணியில் ஷர்துல் தாக்கூர் - முகமது ஷமி இருவரில் யார் விளையாட வேண்டும் என்பது பற்றி எப்போதும் விவாதம் உள்ளது. இந்திய அணி ஷர்துலை நோக்கி சென்று இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஷமி ஆட வேண்டும், ஆனால் அணி ஷர்துலை தான் ஆட வைக்கும், ஏனெனில், இந்திய அணி நிர்வாகம் அவரிடமிருந்து 8-வது வரிசையில் பேட்டிங்கை எதிர்பார்க்கிறார்கள்" என ஆகாஷ் சோப்ரா கூறினார்.
மேலும், "நான் சொல்கிறேன். 8வது வரிசையில் ஷர்துல் எப்போதும் பேட்டிங் செய்யவே மாட்டார். வேறு யாராவது அந்த பெரிய ஷாட்களை ஆடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் அவர்கள் செய்யாவிட்டால், நாம் தோற்றுப் போவோம். எனவே, ஷர்துல் பேட்டிங் ஆட வரப் போவதில்லை. வந்தாலும் அதில் பயனில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஷமியுடன் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறி முடித்தார் ஆகாஷ் சோப்ரா.