துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. இந்தத் தொடர் முழுவதும் துபாயில் மழை குறுக்கிடாத நிலையில், ஒருவேளை இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும், கோப்பை யாருக்கு வழங்கப்படும், ரிசர்வ் டே உள்ளதா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அது பற்றி பார்க்கலாம்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) விதிகளின்படி, இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டி, மழை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் கைவிடப்பட்டால், போட்டி நாளைக்கு (செப்டம்பர் 29, திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்படும். இதுவே 'ரிசர்வ் டே' ஆகும். இன்று போட்டி பாதியில் நிறுத்தப்பட்டால், நாளை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே ஆட்டம் தொடரும்.

ரிசர்வ் டே அன்றும் (செப்டம்பர் 29), போட்டி மழையால் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, 'முடிவு இல்லை' என்று அறிவிக்கப்பட்டால், விதிகளின்படி இரு அணிகளும் கூட்டாக வெற்றியாளர்களாக (Joint Winners) அறிவிக்கப்பட்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.
துபாய் வானிலையைப் பொறுத்தவரை, ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. துபாயில் இன்று மாலை வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை சுமார் 33 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். காற்றின் ஈரப்பதம் 61% ஆக இருக்கும். மழை பெய்வதற்கான வாய்ப்பு 0% ஆகும். எனவே, எந்தவிதமான குறுக்கீடுகளும் இன்றி, முழுமையான 40 ஓவர் ஆட்டத்தைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் முழுவதும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் 'கைகுலுக்க மாட்டோம்" என்ற கொள்கை, ஹாரிஸ் ரவுஃபின் ஆத்திரமூட்டும் சைகைகள், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் புகார்கள் எனப் பல்வேறு விவாதங்கள் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளன.
அனைத்து சர்ச்சைகளையும் கடந்து, களத்தில் கிரிக்கெட் சிறப்பாகவே இருந்துள்ளது. இந்தியாவின் அபிஷேக் ஷர்மாவின் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட், குல்தீப் யாதவின் 13 விக்கெட்டுகள் என இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த வரலாற்றுப் போட்டியில், கோப்பையை வென்று ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடப்போவது யார் என்பதைப் பார்க்க, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.