அகமதாபாத்: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக பிசிசிசி மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மும்பையில் நடந்து வரும் பிரம்மாண்ட விழாவில் ஐசிசி நிர்வாகத் தலைவர் ஜியோஃப் அலார்டைஸ், பிசிசிஐ ஜெயலாளர் ஜெய் ஷா, இந்திய ஜாம்பவான் சேவாக், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடருக்கான மொத்தமாக 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்.5ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி மோதவுள்ளது. அதேபோல் அக்.8ஆம் தேதி இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது.
அதேபோல் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்ற தெரிய வந்துள்ளது. அதில் அக்.15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதேபோல் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் மும்பை வான்கடே மைதானம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இறுதிப்போட்டி மீண்டும் அகமதாபாத் மைதானத்திலேயே நடத்தப்படவுள்ளது.