என்னாது நம்பவே முடியலை.. நியூயார்க்கில் இந்தியா - பாக். உலகக்கோப்பை போட்டி.. ஐசிசி அதிரடி முடிவு!
நியூயார்க் : அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டியை நியூயார்க் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது ஐசிசி. கிரிக்கெட் வரலாற்றில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கும் போட்டி என்றால் அது இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிதான். அதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது ஐசிசி.
தற்போது நியூயார்க் நகரின் அருகில் மிகப் பெரிய மைதானம் ஒன்றை ஐசிசி உருவாக்கி வருகிறது. அந்த நகரத்தில் இருந்து 30 மைல் தொலைவில் இருக்கும் எய்சன்ஹோவர் பார்க்கில் 930 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் அமைய உள்ளது. இதில் 34,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம்.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த மேஜர் கிரிக்கெட் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தொடருக்கு ஒரளவு பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். அதை அடுத்து அங்கே டி20 உலகக்கோப்பையையும் நடத்தினால் அமெரிக்காவை கிரிக்கெட்டின் முக்கிய நாடாக மாற்றி கல்லா கட்டலாம் என்பதே ஐசிசியின் எண்ணம்.
ஏற்கனவே, அமெரிக்காவில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. ஒன்று டல்லாஸ் நகரிலும், மற்றொன்று மியாமியிலும் உள்ளன. தற்போது மூன்றாவது மைதானத்தையும் தயார் செய்து இருக்கும் ஐசிசி, அதில் முதல் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்தி அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் பெரிய அளவில் கிரிக்கெட்டை கொண்டு சேர்க்க உள்ளது. அதன் பின் பிற கிரிக்கெட் நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கள் கிரிக்கெட் தொடர்களை நடத்தி காசு பார்க்கலாம்.
2௦28 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. அதற்குள் கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்தி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவும் ஐசிசி பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications