மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அதிகபட்சமாக இரு அணிகளும் இந்த தொடரில் மூன்று முறை மோத வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்துக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த சூழலில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே உலக சாம்பியன்ஸ் லெஜன்ட் தொடரில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அடங்கிய அணியுடன் இந்திய அணி மோத மறுத்துவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ், பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி எங்கு நடந்தாலும் இந்தியா தான் வெற்றி பெறும்.
ஆனால் இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த போட்டி நடைபெறாது. நமது ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை நமக்கு தந்தது. நமது இந்தியா எதிரிகளை அவர்கள் நாட்டிற்கு சென்று அழிக்கும் வல்லமையை பெற்றது என்று பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன்சிங் நாம் எது முக்கியம் எது முக்கியம் இல்லாத ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ராணுவ வீரர் நமது பாதுகாப்புக்காக நாட்டின் எல்லையில் நிற்கின்றார். அவருடைய குடும்பத்தை பிரிந்து சில சமயம் வாழ்க்கையே தியாகம் செய்கின்றார். அவருடைய உடல் மட்டும் தான் வீட்டுக்கு வரும். அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது மிகவும் ஒரு அர்ப்பமான விஷயம். எனவே இந்த போட்டியை இந்தியா விளையாடக் கூடாது என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.