துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், மறுபுறம் இந்திய ரசிகர்கள் அது குறித்து பல்வேறு நகைச்சுவை மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்திய அணியின் ஆட்டத்தைப் பாராட்டியும், போட்டி சுவாரசியம் இல்லாததைக் கிண்டல் செய்தும் இந்த மீம்ஸ்கள் பரவி வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இந்திய அணி நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 127 ரன்களுக்குச் சுருட்டியது. அடுத்ததாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடினார். அவர் தனது இன்னிங்ஸின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார், இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். இதற்கு முந்தைய போட்டியிலும் இன்னிங்ஸின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து இருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டி, அபிஷேக் ஷர்மா தான் வீரேந்தர் சேவாக் போல ஆடுகிறார் எனப் பாராட்டி மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். வின்னர் படத்தில் பிரசாந்த் தனது பெயரைச் சொல்லாமல், "நான் யார் கண்டுபிடியுங்கள்" என்று தாத்தா - பாட்டியிடம் கேட்கும் காட்சியை வைத்து, "முதல் பந்தில் சிக்ஸ் அடித்தேன், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தேன். நான் யார் சொல்லுங்க... வீரேந்தர் சேவாக்!" என்று சொல்வது போல மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் சரணடைந்தது. எந்த வகையிலும் இந்திய அணிக்கு ஈடுகொடுத்து ஆடவில்லை. அதனால் போட்டி சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இதை ஊடகங்கள் "மிகப்பெரிய எதிரிகள் மோதும் போட்டி" என விளம்பரம் செய்திருந்தனர். அதை வைத்து நகைச்சுவை செய்து சில மீம்ஸ்களை வெளியிட்டு உள்ளனர்.
குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டன், சூதாட்டத்தில் பணம் இழந்த பிறகு ஒரு காட்சியில், "ஏதோ பெரிசா நொட்டிரும்னு சொன்ன, ஒண்ணும் நடக்கலை" என்று கோபத்தில் பேசுவார். அந்த வசனத்தை வைத்து, ஊடகங்களின் விளம்பரங்களை ரசிகர்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.

இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டது. அது ஒரு பக்கம் சர்ச்சையாக மாறியது. ஆனால், மறுபக்கம் இது பற்றிய புரிதல் இல்லாத ரசிகர்கள் பலரும், "பாகிஸ்தான் எல்லாம் ஒரு ஆளே இல்லை" என வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருப்பதாக மீம்ஸ் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம், போட்டியில் பாகிஸ்தானின் மிக மோசமான ஆட்டத்தை அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.