மும்பை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்வதற்காக, மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக சொதப்பி வருவதால், அந்த அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆசியக் கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி பெற்றது.

இதனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி கம்பேக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வலிமையான இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால், அந்த அணியின் 11 வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதனிடையே பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2வது முறையாக போட்டிக்கு முன் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் மோசின் நக்வி அந்த அணி வீரர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். கடந்த போட்டியின் போது இந்திய அணி வென்ற பின், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்து அவமானப்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
இந்த சூழலில் மோசின் நக்வி பாகிஸ்தான் வீரர்களுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் வீரர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஒரு நடவடிக்கையையும் அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒருவர் மோட்டிவேஷனல் ஸ்பீக்கரை பணியில் அமர்த்துவார்கள்.
அதுபோல் பாகிஸ்தான் வீரர்களை ஊக்கப்படுத்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கரை நியமனம் செய்துள்ளனர். அதேபோல் இந்தப் போட்டியிலும் ஆண்டி பைகிராஃப்ட் தான் போட்டி நடுவராக செயல்பட உள்ளார். இதனால் பாகிஸ்தான் கம்பேக் கொடுத்து, ஆசியக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கான ரேஸில் முன்னிலைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.