இந்தியாவுக்கு துவக்கமே அசத்தல்
இந்த நிலையில் பாகிஸ்தான் இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார் புவனேஸ்வர் குமார். வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். மீண்டும் புவி வீசிய 5வது ஓவரில் பாக்கர் சமான் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 2 துவக்க வீரர்களையும் இழந்து தவித்தது.
கேட்சை விட்ட தோனி
அடுத்து ஷோயப் மாலிக், பாபர் ஆசாம் இணைந்து கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். மாலிக் 26 ரன்கள் இருந்த போது தோனி ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றாலும் தோனி போன்ற அனுபவ கீப்பர் அதை பிடித்திருக்கலாம்.
மிடில் ஆர்டரை வீழ்த்திய ஜாதவ்
அடுத்து 21.2 ஓவர்களில் குல்தீப் யாதவ் பந்தில் பாபர் 47 ரன்களில் வெளியேற, அடுத்து கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது 6 ரன்களில் ஜாதவ் பந்திலும், ஷோயப் மாலிக் 43 ரன்களில் ராயுடுவின் அட்டகாசமான ரன் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். ஜாதவ் தொடர்ந்து ஆசிப் அலி 9 ரன்கள், ஷதாப் கான் 8 ரன்களில் வெளியேற்ற பாகிஸ்தானின் மொத்த மிடில் ஆர்டரும் முடிவுக்கு வந்தது. ஜாதவ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரை வீழ்த்தி இந்தியா ஆதிக்கம் செலுத்த காரணமாக இருந்தார்.
பாக். 162 ரன்கள்
அடுத்து பும்ரா தன் முதல் விக்கெட்டாக பாஹீம் அஷ்ரபை 21 ரன்களில் வீழ்த்தினார். அடுத்து ஹசன் அலி 1, உஸ்மான் கான் 0 எளிதில் வெளியற பாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் 43.1 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில், புவனேஸ்வர் 3, பும்ரா 2, குல்தீப் 1, கேதார் ஜாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.
இந்தியாவுக்கு 163 ரன்கள் என்பது எளிய இலக்கு என்றாலும், பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்தியா கவனமாக ஆட வேண்டியது அவசியம். இந்தியா இப்போதைக்கு பாதி கிணறு மட்டுமே நல்லபடியாக தாண்டியுள்ளது.