
தடுமாற்றம்
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், 84 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, முதல் 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

கோஹ்லி அசத்தல்
ரோகித் ஷர்மா, ரஹானே, ரெய்னா ஆகிய ஸ்டார் பேட்ஸ்மேன்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், திறமையான வேகப்பந்து தாக்குதலையும், மோசமான பிட்சின் கணிக்கமுடியாத செயல்பாட்டையும் எதிர்கொண்ட கோஹ்லி, 49 ரன்கள் சேகரித்து இந்திய அணியின் 5 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு வித்திட்டார்.

பாகிஸ்தான் அப்படியில்லை
விக்கெட்டுகள் மேலும் சரியாமல் தடுத்ததோடு, அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டி கோஹ்லி, இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் அதுபோல எந்த ஒரு பேட்ஸ்மேனும் திறமையாக பேட் செய்யவில்லை.

ஜாம்பவான்கள் கருத்து
கோஹ்லியின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ஜாவித் மியான்டட், முகமது யூசுப், ஹனிப் முகமது போன்றோர் சிலாகித்துள்ளனர். பாகிஸ்தான் அதுபோன்ற பேட்ஸ்மேன்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மதிக்க வேண்டும்
ஹனிப் முகமது கூறுகையில், அதிரடியாக ஆடுவது பற்றிதான் இப்போது அதிகம் பேச்சு அடிபடுகிறது. ஆனால், பிட்சின் தன்மை, எதிரணியின் பவுலிங் வலிமையை கருத்தில் கொண்டு பேட் செய்ய வேண்டியதும் அதே அளவுக்கு அவசியம். தேவவையேற்படும்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எதிரணி பந்து வீச்சை மதிக்கவும் கற்க வேண்டும்.

கோஹ்லி முதிர்ச்சி
அதேநேரம், கோஹ்லி அதுபோன்ற முதிர்ச்சியான, ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோஹ்லியின் அந்த ஆட்டம் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள்.

கவாஸ்கர் முதல் கோஹ்லிவரை
கவாஸ்கரில் ஆரம்பித்து, கோஹ்லிவரை தொடர்ந்த்து பல வருடங்களாக இந்தியா சிறப்பான பேட்ஸ்மேன்களை உலக கிரிக்கெட்டுக்கு அளித்து வருகிறது. இதுபோன்ற பேட்ஸ்மேன்கள், இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்து அவர்களையும் சிறந்த பேட்ஸ்மேன்களாக மாற மறைமுகமாக உதவுகிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர் காரணம்
இந்திய இளைஞர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கால் கவரப்பட்டு, சிறப்பாக பேட் செய்ய அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தவர்கள்தான். அதனால்தான் இந்தியாவில், உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உருவாகிக்கொண்டுள்ளார்கள். இவ்வாறு ஹனிப் தெரிவித்தார்.

திறமையை வளர்க்கனும்
ஜாவித் மியாண்டட் கூறுகையில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் டெக்னிக்கலாக மேம்பட வேண்டியது அவசியம். பொறுமையும் அவர்களுக்கு தேவை. சர்வதேச போட்டிகளில் ஆட வந்த பிறகு பயிற்சியாளர்களை நம்பிக்கொண்டிருக்க முடியாது. நமது திறமையை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் தடுமாறுகிறது
வீடியோ ஆய்வு போன்ற பல வசதிகள் தற்போதுள்ள பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கிறது. அப்படி இருந்தும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் தொடர்ச்சியாக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

ரன் பசி
இந்திய பேட்ஸ்மேன்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ள மிகவும் மெனக்கெடுகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க வேண்டும் என்ற பசி உள்ளது. அதற்கு விராட் கோஹ்லி ஒரு உதாரணம். இவ்வாறு மியான்டட் தெரிவித்தார்.

நல்ல பேட்ஸ்மேன்களுக்கு அழகு
முகமது யூசுப் கூறுகையில், மோசமான பிட்சில் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ஆடுவதுதான் நல்ல பேட்ஸ்மேன்களுக்கு அழகு. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதில்தான் கோட்டை விடுகிறார்கள். பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அடித்து ஆடும் அவர்களால், பவுலிங் பிட்சுகளில் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை.

காலத்தின் கட்டாயம்
கோஹ்லி போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் எந்த பிட்சாக இருந்தாலும், தங்களை தகவமைத்துக்கொண்டு சிறப்பாக ஆடுவார்கள். பாகிஸ்தானும் அதுபோன்ற ஆட்டக்காரர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாற அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











