பாலக்கலே: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள பாலக்கலே மைதானத்தின் சைட் பவுண்டரி 75 மீட்டர் தூரமும், ஸ்ட்ரைட் பவுண்டரி 80 மீட்டர் தூரமும் அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இன்று விளையாடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள ஹோட்டல்களில் தங்கி போட்டியை நேரடியாக காண ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகளவிலான மழை இலங்கை பெய்யும். வழக்கமான இம்மாதங்களில் இலங்கை அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும். ஆனால் பிசிசிஐ தலையீட்டால் ஆசியக் கோப்பை தொடரை இலங்கையிலும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலக்கலே மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
பாலக்கலே மைதானம் இலங்கையின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாகும். பிட்சை பொறுத்தவரை பகலிரவு ஆட்டங்களின் போதும் பெரிதாக பனிப்பொழிவு இருக்காது என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறி இருக்கிறார். அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆனால் மழைக் காலம் என்பதால், சேஸிங்கை தேர்வு செய்ய இரு அணிகளும் முனைப்புக் காட்டும்.

ஏனென்றால் பாலக்கலேவில் நடைபெற்ற வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில், 2வது பேட்டிங் செய்த இலங்கை அணியே வெற்றிபெற்றது. அதேபோல் 10 ஓவர்களை கடந்து பிட்சில் ஸ்விங் இருக்காது என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஷாகின் அப்ரிடியின் முதல் ஸ்பெல்லை மட்டும் கவனமாக கடந்தாலே இந்திய அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.
அதேபோல் பாலக்கலே மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் அபார நீளம் கொண்டது. சைட் பவுண்டரி எல்லை 75 மீட்டர் தூரமும், ஸ்ட்ரைய்ட் பவுண்டரி எல்லை 80 மீட்டர் தூரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிகளவு ரன்களை ஓடியே எடுக்க வேண்டிய நிலை வரும். இந்திய மைதானங்களை போல் 65 மீட்டர் தூரத்தில் சிக்சர் அடிக்க முடியாது.
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் கூட ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் ரோகித் சர்மா, ஃபக்கர் ஜமான், ஷடாப் கான் உள்ளிட்டோரை தவிர்த்து வேறு எந்த வீரராலும் சிக்சர் விளாச முடியாது என்று பார்க்கப்படுகிறது.