அகமதாபாத் : 2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பவுலிங்கில் நடந்த விஷயம் ஒன்று அப்படியே அச்சு அடித்தது போல மீண்டும் 2023 உலகக்கோப்பை தொடரில் நடந்துள்ளது.
அதாவது, இந்திய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் அணியில் பத்து விக்கெட்டையும் சாய்த்தார்கள். இதற்கு முன்பும் இதே பாகிஸ்தான் அணியை வைத்து இதே சாதனையை இந்திய அணி உலகக்கோப்பையில் செய்துள்ளது.
உலகக்கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மகிழ்ச்சியோடு இந்த ஆச்சரிய சம்பவமும் கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளது.

2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 260 ரன்கள் குவித்து இருந்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியை இந்தியா 231 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து போட்டியில் 29 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணியில் ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாப் பட்டேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் என ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசி இருந்தனர்.
அவர்கள் அனைவருமே தலா 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அதே போல, 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலும் நடந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் 5க்கும் மேற்பபட்ட ஓவர்கள் வீசினர். ஷர்துல் தாக்குர் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அந்த அதிக ஓவர்கள் வீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா என ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு ஆளுக்கு 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இந்த சம்பவம் மூன்றாவது முறையாக நடக்கிறது.
2011 மற்றும் 2023 உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா இந்த சாதனையை செய்த நிலையில், 2015 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் ஐந்து பந்துவீச்சாளர்கள் இதே போல தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர்.