துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபேவின் பந்துவீச்சு ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பி இருக்கிறது. சிவம் துபே வீசிய முதல் 3 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலமாக பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே ஃபர்ஹாம் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா தவறவிட்டார். இதன்பின் பாகிஸ்தான் அணி அதிரடியாக ரன்களை குவித்தது.

பும்ராவின் ஓவர்களில் குறைந்தது 2 பவுண்டரிகளை விளாசிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை குவித்தது. இதன்பின் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் சிக்சர்கள் பறந்து கொண்டே இருந்தன. இதனால் பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 91 ரன்களை குவித்திருந்தது. இதனால் இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது.
அப்போது பிட்ச் ஸ்லோயராக மாறி வருவதை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கணித்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல், ஸ்பின்னர்கள் மற்ரும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார். இதனால் உடனடியாக சிவம் துபே கைகளில் பந்து கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 3வது பந்திலேயே சயீம் அயூப்பை 21 ரன்களில் சிவம் துபே வீழ்த்தினார்.
அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த சிவம் துபே, மீண்டும் அவரின் 2வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த கட்டுப்படுத்திய துபே, 15வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியாக ஆடி வந்த ஃபர்ஹாம் விக்கெட்டை 58 ரன்களில் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
சிவம் துபேவின் பவுலிங்கை பயன்படுத்தி குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அலறவிட்டனர். இதனால் அடுத்த 5 ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி ஆட்டத்திற்குள் கம்பேக் கொடுத்தது. இறுதியாக சிவம் துபே 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.