கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் சுற்றுப் போட்டிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் திடீரென கொழும்பு வந்து இறங்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர், கொழும்பு விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்திய அணி வீரர்கள் கொழும்பு வந்தடைந்த சிறிது நேரத்திலேயே ஸ்ரேயாஸ் ஐயரும் அங்கு வந்து சேர்ந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தத் திடீர் வருகை ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா வயிற்றுத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் குணமடைந்து அணியுடன் இணைந்திருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்குத் தேவையான முழு உடற்தகுதியை எட்டிவிட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஒருவேளை அபிஷேக் சர்மாவால் விளையாட முடியாவிட்டால், அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கும் நோக்கில் ஸ்ரேயாஸ் ஐயர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அல்லது அவசரத் தேவைக்கான மாற்று வீரராக அவர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ தரப்பிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அடுத்த மாதம் துவங்க உள்ள 2026 ஐபிஎல் தொடருக்காகப் பஞ்சாப் அணி அபுதாபியில் பிப்ரவரி 8 முதல் 14 வரை சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. இதில் யுஸ்வேந்திர சாஹல், ஷஷாங்க் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே அவர் இந்திய அணிக்காகத் தயார் நிலையில் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது அவர் கொழும்பு வந்திருப்பதன் மூலம் அந்தச் சந்தேகம் வலுத்துள்ளது.
இதற்கிடையில், கொழும்பு வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு இலங்கை பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்டிய நடனக் கலைஞர்கள் மேள தாளங்களுடன் நடனமாடி வீரர்களை வரவேற்றனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.