மும்பை : விராட் கோலியின் கால் தூசுக்கு பாபர் அசாம் சமமாக மாட்டார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நயன் மோங்கியா கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவி இருப்பதால் இந்த போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் நயன் மோங்கியா பாபர் அசாமின் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவரை பார்க்கும் போதே பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று தெரிகிறது. தன் மீது அதிக அழுத்தத்தை பாபர் அசாம் செலுத்தி கொள்கிறார். அவர் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி போட்டி போட முடியும்.
ஆனால் பாபர் அசாமும் தேவையில்லாத அழுத்தத்தை தன் மீது செலுத்திக் கொள்கிறார். அது மட்டும் அல்லாமல் அவருடைய அணியினரும் பேட்டிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் ஆதரவு கொடுப்பதில்லை. இதனால் தேவையில்லாத அழுத்தம் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பாகிஸ்தான் அணியில் ஏற்படுகிறது.
விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுகிறார்கள். இதன் மூலம் பாபர் அசாம்க்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. தாம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றும் களத்தில் நின்று அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தேவை இல்லாத நெருக்கடி ஏற்படுகிறது. உண்மை என்றால் அவர் விராட் கோலியின் கால் தூசுக்கு கூட சமமாக வர மாட்டார்.
பாபர் அசாம் நன்றாக விளையாடும் வரை பாகிஸ்தான் அணி நல்ல அணி போல் தெரிகிறது. ஆனால் அவர் ஆட்டம் இழந்து விட்டால் பாகிஸ்தான் அணியே தடுமாறி விடுகிறது. அமெரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர்களும் வெஸ்ட் இண்டீசில் சுழற் பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை கெடுக்கிறார்கள். எனவே வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு சில திறமை வேண்டும்.
நீங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்திய வீரர்களுக்கு தான் அதிக திறமை இருக்கின்றது. இது போன்ற ஆடுகளத்தில் விளையாட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு திறமை போதாது. எனவே பாகிஸ்தான் பேட்டிங் இடம் இருந்து எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என்று நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.